விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடந்த 9 ஆம் தேதி திண்டிவனம் ரோஷணை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது…..
நான் கடந்த 7 ஆம் தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு வி.கே.சசிகலா நேரடியாகப் பதிலளிக்காமல், தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும் செல்போனிலும் என்னை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.
செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வி.கே.சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாகப் பேசவும் காரணமாக இருந்த வி.கே.சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்மநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
புகாரின்படி வி.கே.சசிகலா உள்பட 501 பேர் மீது 506(1)-கொலை மிரட்டல், 507- எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாகப் பேசுதல், 109-அடுத்தவரைத் தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (IP ACT)-தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலைப் பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல் ஆய்வாளர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனால் அதிமுகவினர் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.