7 தமிழர் விடுதலை – நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் சார்பில் சொன்னது என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

29 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால் தனது தண்டனையை நிறுத்தி வைத்தும், விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சனவரி 21 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது ஆளுநர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ‘‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார்’’ என உறுதியளித்தார். அதையடுத்து நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் வழங்கி விசாரணையை 2 வார காலத்துக்குத் தள்ளி வைத்திருந்தனர். இந்த வழக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் முகமது நசீம்கான், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆராய்ந்தார். அதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என்று தனது விளக்கத்தை கடந்த சனவரி 25 ஆம் தேதி மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை தீர்மானத்தை 2018 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், தற்போது இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என மத்திய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம், தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.

Leave a Response