
இந்திய அமெரிக்கரான 15 வயது மாணவியை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கவுரவமிக்க சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
இந்திய அமெரிக்கரான சுவேதா பிரபாகரனின் பெற்றோர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கடந்த 1998ம் ஆண்டு இவரது பெற்றோர் புலம் பெயர்ந்து உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தாமஸ் ஜெபர்சன் பள்ளியில் சுவேதா மாணவியாக இருக்கிறார். இளம் பெண்களின் வருங்காலம் மற்றும் உலகை மாற்றி அமைப்பதற்கான ஈர்ப்பிற்குரிய விசயத்தை தொடர்ந்திட நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
இந்தியநேபோலிசில் பிறந்துள்ள சுவேதா வெள்ளை மாளிகையால் சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 இளம்பெண்களில் ஒருவர். சுவேதா, எவ்ரிபடி கோட் நவ் என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அடுத்த இளம் தலைமுறையினர் பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் அதிபர்களாக வருவதற்குரிய பணியை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சுவேதாவின் வழகாட்டுதலின்படி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறியீடு எப்படி அமைப்பது என்பது குறித்து கற்று கொண்டுள்ளனர்.
அதனுடன் பள்ளிகளில் ஸ்டெம் (அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித) செயல்பாடுகளில் ஆயிரக்கணக்கான டாலர்களை மாணவர்கள் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளது. அவரது தலைமையிலான திட்டங்களால் இளஞ்சிறுமிகள் நம்பிக்கைக்குரிய மாணவர்களாக, சமூக தலைவர்களாக மற்றும் வளரும் தொழில் நுட்பவாதிகளாக மாறியுள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. அறிவியல் மற்றும் கணினியில் உள்ள ஆர்வத்துடன், சுவேதா பரதநாட்டியமும் கற்றுள்ளார்.
அவர் பல வருட பயிற்சிக்கு பின் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை கடந்த ஆகஸ்டு 2ந்தேதி திருநெல்வேலியில் முதன்முறையாக நடத்தினார். அவரது தந்தை பிரபாகரன் முருகையா டெக்பெட்ச்.காம் இணையதள நிறுவனராகவும் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.
