மண்ணாங்கட்டிகளுக்கு அஞ்சமாட்டேன் – ரஜினி ரசிகர்கள் மீது நாஞ்சில் சம்பத் காட்டம்

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார்.

இந்தக் கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களைக் காண்பித்து, தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை விமர்சனம் செய்தார். அந்தப் பதிவில், அவுட்லுக்குன்னு சொல்றாரு..ஹிந்து குழுமம்னு சொல்றாரு..அது செரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது! எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் நாஞ்சில் சம்பத்தை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

பல நாட்களாக இந்தச் சிக்கல் தொடருகிறது.இந்நிலையில் பிப்ரவரி 13 இரவில் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

ரஜினி ரசிகர்களின் ஆபாச அர்ச்சனைகளும் கொலை மிரட்டல்களும் என்னை கொஞ்சமும் பாதிக்கவில்லை. மரணத்தின் வாசல் வரை போய்விட்டு வந்தவன் நான் மண்ணாங்கட்டிகளுக்கு அஞ்சுவதாக இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னூட்டத்திலும்,ரஜினி ரசிகர்கள் நாஞ்சில் சம்பத்தைக் கடும் சொற்களால் விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Response