திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்?

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

இந்த கும்பலை சேர்ந்த மணிகண்டன் திருவாரூர் காவல்துறையில் சிக்கினார். தப்பி ஓடிய சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி சரண் அடைந்தார்.

பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முருகன் சரண் அடைந்தார். மேலும் தனிப்படை காவல்துறையினர் திருவாரூரில் சுரேசின் தாயார் கனகவள்ளியையும், மதுரையில் முருகனின் கூட்டாளியான கணேசனையும், நகைகளை விற்றுக் கொடுக்க உதவியாக இருந்த ராதாகிருஷ்ணன் என இதுவரை 6 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த சுரேசை திருச்சி கோட்டை காவல்துறையினர் கடந்த 14 ஆம் தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மதுரை வாடிப்பட்டி காவல்துறையினர் திருச்சி வந்து சுரேசிடம் விசாரித்தனர். தொடர்ந்து நேற்று 3 ஆவது நாளாக திருச்சி காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது பரபரப்பு தகவலை சுரேஷ் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது மாமா (முருகன்) என்னை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டார். அதன்படி, 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்கத் தொடங்கினோம். 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.

அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை எழுந்ததால், மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

அதன்படி, திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை மாமா முருகன் திட்டபடி கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா? என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாகப் பெற்ற அந்த பிரபல நடிகையிடம் தனிப்படையினர் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் தமிழில் இந்த வாரிசு நடிகை நடித்துள்ளார். மேலும் சுரேஷ் கும்பலுடன் உல்லாசமாக தொடர்பில் இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் குறித்தும் விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நடிகைகளிடம் விசாரித்தால்தான் கொள்ளையன் சுரேஷ் சொன்னது உண்மையா? என தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ள நடிகை கீர்த்திசுரேஷ் என்று சொல்லப்படுகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே அதை உறுதி செய்யமுடியும் என்கிறார்கள்.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்ததில் தனது பங்கான சுமார் ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பிலான நகைகளை முருகன் காரில் எடுத்து சென்று திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டுப்பகுதியில் குழி தோண்டி புதைத்து விட்டார். அவற்றின் எடை மட்டும் 12 கிலோ ஆகும். இந்த விவரத்தை பெங்களூரு காவல்துறையிடம் முருகன் தெரிவித்தார். உடனடியாக பெங்களூரு காவல்துறையினர் முருகனை காரில் அழைத்து கொண்டு திருச்சி வந்து, காட்டுப்பகுதியில் புதைத்த நகைகளை மீட்டனர்.

அவற்றை கர்நாடக காவல்துறையினர் காணொலியாக எடுத்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் அந்த காணொலியை வெளியிட்டனர். காட்டுப்பகுதியில் 2 அடி ஆழத்திலேயே நகைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்தது. கறுப்பு நிற பெரிய பையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வைக்கப்பட்டு, அதன் மீது பெரிய பாலித்தீன் பையால் மூடப்பட்டிருந்தது.

அவற்றை முருகன் தோண்டி எடுப்பதுபோலவும், அந்த நகைகளை காண்பிப்பதுபோலவும் இடம் பெற்றிருந்தது. நகைகளை பார்த்ததும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், முருகன் எவ்வித பதற்றமும் இன்றி நகைகளை எடுத்துக் கொடுக்கிறார். இந்தக் காட்சிகள் அந்தக் காணொலியில் உள்ளன.

Leave a Response