தமிழ்நாடு வெதர்மேன் என்கிற பெயரில் வானிலை குறித்து எழுதிவரும் பிரதீப் ஜான் கஜா புயல் குறித்து எழுதியிருப்பதாவது….
தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்குத் தள்ளப்படும். ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது. மேற்கு, தென்மேற்காகப் புயல் நகரும்போது வேகமாக நகரும். ஆதலால், 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடக்கும்.
சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ரெட் அலர்ட் என்பது புயலோடு தொடர்புடையது. ஆதலால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். 24 மணிநேரத்தில் 200 மிமீ மழையைப் பெய்துவிட்டு செல்லும்.
புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கேட்டி, கொடநாடு, கோத்தகிரி பகுதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியவை.
வடமேற்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக கடற்கரைப்பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும்.
வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும்.
கேரள மாநிலத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புண்டு ஆனால், கஜா புயலால் தென் மாவட்டங்களுக்குக் குறைவான மழையே கிடைக்கும்.
நாளை முதல் வடதமிழக கடற்கரை முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிவரை கடல் மிகுந்த ஆவேசமாக இருக்கும். ஆதலால், 16-ம் தேதிவரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக் கடலுக்குள் சென்றபின் புயல் என்னாகும், எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுவரை 23 சதவீதமும், சென்னையில் 52 சதவீதமும் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த கஜா புயலால் நமக்கு நல்ல மழை கிடைக்கும். வேகமாகப் புயல் நகரும்போது, குறைந்தநேரத்தில் அதிகமான மழையைக் கொடுக்கும்.
இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.