புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, மரணதண்டனைக்கு எதிரான படம்


எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் மே 15 அன்று வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படம் முன்னர் ‘புறம்போக்கு’ என அழைக்கப்பட்டு வந்தது. தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தை பெற்றதோடு, தனது அடுத்த படங்களான ‘ஈ’ மற்றும் ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் எண்ணத்தைக் கவர்ந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தின் மூலம் மக்களைச் சந்திக்க வருகிறார்.
ஏகாம்பரம் ஒளிப்பதிவில், செல்வ குமார் அவர்களின் வியத்தகு கலை இயக்கத்தில், கணேஷ் குமார் படத்தொகுப்பில், கேட்போரை மயக்கும் வண்ணம் இசையமைத்துள்ளார் அறிமுக இசையமைப்பாளர் வர்ஷன், மிராக்கல் மைக்கல் அவர்களின் சண்டைப் பயிற்சி மிகவும் வரவேற்புப் பெறும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய படத்தின் தலைப்பை பற்றி விளக்கும் பொழுது இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது
“குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ‘புறம்போக்கு’என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்தத்தைக் கொண்டது.
‘புறம்போக்கு’ என்ற சொல் தமிழில்,வழக்கத்தில் கொச்சையாக பயன் படுத்தப்பட்டாலும், இது ஆழமான அர்த்தம் கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்.

புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல, மக்களுக்குப் பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்பு பகுதியைத் தவிர்த்து பொதுத் தேவைகளூக்கு ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர். மேலும், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டிக் கொள்வதற்கு நத்தம் புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.

இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளுக்கும், பஸ் நிறுத்தம், மேலும் பள்ளிக்கூடம், மருத்துவனை கட்ட அரசு‘புறம்போக்கு’ நிலங்களும் இதில் அடக்கம். மலைகளும், பனி சிகரங்களும் துருவங்களும் சர்வதேச கடல் பரப்பும் புறம்போக்கே.. காற்றும், ஒளியும் நிலவொளியும் சிகரங்களும் எல்லையற்ற அண்டவெளியும் புறம்போக்கே… எதுவும் தனியுடமை அல்ல, பொதுவுடமை தான்.

குழம்பிப் போன இந்த காலகட்டத்தில் பொதுவுடமை கருத்தை மறுபடியும் மறுபடியும் வலியுருத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.” என்று கூறுகிறார் இயக்குனர் ஜனநாதன். இந்தப்படம் மரணதண்டனைக்கு எதிராகப் பேசுகிற படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Leave a Response