காவிரி, மோடி அரசின் வஞ்சகம் தொடருகிறது – பெ.மணியரசன் காட்டம்

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர்
யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி
அரசின் வஞ்சகம் தொடர்கிறது என்று
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்!

காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.

இப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்!

நடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்?

அடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில்? சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்?

உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை! அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்!

இவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது!

சட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response