தமிழர்களைக் கொன்ற துப்பாக்கி சத்தமாவது தமிழக அரசை எழுப்புமா?–சுபவீ காட்டம்.


தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள், செம்மரங்களை வெட்டியதாகக் கூறி, ஆந்திர அரசின் காவல்துறையும், வனத்துறையும் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கும் செய்தி நம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதாக இருக்கிறது. மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் இந்தக் காட்டு விலங்காண்டித்தனத்தைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு இக்கொடுமையைத் தட்டிக் கேட்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாகவே இரு மாநிலங்களுக்கு இடையிலான வழக்காக இதனை எடுத்து விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிகளைக் கிளறும் செயலாக இது அமைந்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்றிருக்கும் சாலை மறியல்கள், கொடும்பாவி கொளுத்துதல் போன்ற போராட்டங்கள் நூற்றுக்குநூறு நியாயமானவை. திராவிட இயக்கத் தமிழர் பேரவையினரும் இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இப்போது அரசு இருக்கிறதா?, தமிழக முதலமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்று ஐயப்படும் நிலைதான் இன்று உள்ளது. தமிழர்களை கொன்ற துப்பாக்கி வேட்டு சத்தமாவது, தமிழக அரசை உலுக்கி எழுப்பும் என்று நம்புகிறோம். உரிய மேல்நடவடிக்கை ஏதும் இல்லை எனில், தமிழர்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினரும், வனத்துறையினரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்படவில்லை எனில், தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்குவதை தவிர வேறுவழியில்லை என்னும் நிலை உருவாகும்.
தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்

Leave a Response