தமிழர் நாகரிக ஆய்வைக் கெடுக்காதீர் – பெ.மணியரசன் வேண்டுகோள்


கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத்
அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு
மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன் கோரிக்கை!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இதற்கு முன் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதற்கு குடியிருப்புகள், இடுகாட்டுத் தாழிகள் போன்றவை கிடைத்தன. ஆனால் கீழடியில்தான் பண்டைய தமிழர்களின் தொழிற்கூடங்கள் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் தொடர்ந்து இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது. முதல் கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்த பின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங்காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத்திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி!

இந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்தவர் திரு. அமர்நாத் அவர்கள். அவர் கீழடி அகழாய்வுப் பிரிவுத் தலைவராகவும், இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களுர் மையக் கண்கானிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இப்பொழுது திரு. அமர்நாத் அவர்களை அசாம் தலைநகர் கவுகாத்திக்கு மாற்றியுள்ளார்கள்.

கீழடி அகழாய்வில் அக்கறை, அர்ப்பணிப்பு, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வந்த திரு. அமர்நாத் அவர்களின் பணியை கீழடி இழப்பது அந்த ஆராய்ச்சித் தொடர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் உணர்வாளர்கள் ஐயுறுகிறோம்; அச்சப்படுகிறோம்.

எனவே, இந்தியத் தொல்லியல் துறை தலைமையானது திரு. அமர்நாத் அவர்களின் பணிமாற்ற ஆணையை மறு ஆய்வு செய்து கீழடியிலேயே அவரை மீண்டும் அதே பணியில் அமர்த்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Response