தஞ்சை தமிழ்ச்சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா தஞ்சையில் 3 நாட்கள் நடந்தது. 3-ம் நாளான நேற்று (16.01.2017) காலை தேவராட்டம், கருத்தரங்கம், நாட்டுப்புற ஆடல்கள், நகைச்சுவை பாட்டுமன்றம் ஆகியவை நடைபெற்றன.
மாலையில் நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். விழாவில் மலேசியக் கல்வி அமைச்சர் கமல்நாதன், உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி.ஆனந்தன், சிங்கப்பூர் துணைபிரதமரின் கிளைச் செயலாளர் ஜோஸ்வாகுமார், இலண்டன் டாக்டர் தனபால், ஏர்போர்ட் மூர்த்தி, மேரிலாண்ட் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜன் நடராஜன், சீனாவை சேர்ந்த ஜார்ஜ்ஜூவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவிற்கு தலைமை தாங்கிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராசன் பேசியதாவது:-
ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதா? வேண்டாமா? என்ற போராட்டம் ஏற்பட்டது. சிலர் வேண்டாம் என்றார்கள்.
எம்.ஜி.ஆர். மறைந்த போது அதைக்கூட ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கவில்லை. எனக்குத் தகவல் வந்தவுடன் நான் சசிகலா, தினகரனுக்கு தெரிவித்து ஜெயலலிதாவுக்கு தெரிவித்து ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்துவரச்சொன்னேன்.
அங்கு வந்த ஜெயலலிதாவை சிலர் அடைத்து வைக்க முயன்றனர். அவரை தினகரன் மீட்டு ராஜாஜி அரங்கத்திற்கு அழைத்து வந்தார்.
அப்போது எம்.ஜி.ஆர். உடல் அருகே ஜெயலலிதாவை நிற்க வைத்தது நடராஜன், சசிகலா, திவாகரன், தினகரன் ஆகியோர் தான். விடிய, விடிய நின்ற அவரை நாங்கள் தான் பாதுகாத்தோம்.
எங்கள் குடும்பம் தான் அவரைக் காத்தது. அதனால் எங்கள் குடும்பம் தான் அரசியல் செய்கிறது.
ஜெயலலிதாவை நாங்கள் ஆதரித்த போது யாரும் அவரை ஆதரிக்கவில்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆவதை ஜனாதிபதி கூட ஏற்கவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியைத்தான் ஆதரித்தனர்.
அதன் பின்னர் ஜெயலலிதாவை முதல்-அமைச்சர் ஆக்கினோம். காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்தி 50 ஆண்டுகள் ஆட்சியில் அமராமல் இருப்பதற்கு அடித்தளமிட்டார் அண்ணா. அதன் பின்னர் திராவிட இயக்கங்கள் தான் 1967-ல் இருந்து 2017 வரை ஆட்சி செய்து வருகின்றன. காங்கிரசை வேரோடும், வேரடி மண்ணோடும் புதைத்து அடித்தளமிட்டு இருக்கிறோம். தமிழகத்தில் தற்போது காங்கிரசின் நிலை ஜீரோ தான்.
அழித்த காங்கிரசை மீண்டும் உயிர்ப்பித்த கொடுமை கருணாநிதியைத்தான் சாரும். எங்களுக்கு அல்ல. நாங்கள் பதவி, பட்டங்கள் பற்றி கவலைப்படவில்லை. 50 ஆண்டுகளால காங்கிரசால் முடியாததை, காவி செய்து விடப்போகிறதா?
பிரதமர் மோடி நல்லவர் தான். ஆனால் சிலரின் பேச்சை கேட்டுக்கொண்டு.. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. விஷமிகளை நம்பி, சாதி, வேறுபாடுகள் இல்லாமல் அமைதியாக உள்ள தமிழகத்தில் ஆட்சியை சிலர் உடைக்க நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாது.
30 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு துணை நின்றவர் சசிகலா. ஜெயலலிதா என்ன சாதி என்று நாங்கள் பார்க்கவில்லை. அ.தி.மு.க.வின் தலைவியாக பார்த்தோம். 30 ஆண்டாக எனது மனைவி சசிகலா அவரை தோளில் சுமந்தார். ஆனால் இன்று அவர் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று கூறுகிறார்கள்.
வெட்கமாக இல்லையா, என அவர்களைக் கேட்கிறேன். இந்த விஷமத்தைப் பரப்புகிறவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று கிழித்துக்காட்டுவேன். சாதி, மத பேதம் இல்லாத தமிழகத்தில் அ.தி.மு.க.வை 36 ஆண்டுகளாக நாங்கள் ஏற்று உள்ளோம். ஆனால் 30 நாட்களுக்கு கூட எங்களை ஏற்க முடியவில்லை ஏன். யார் வந்தாலும் அவர்களை சந்திக்க தனி ஆளாக தயாராக உள்ளேன்.
சாதிமத பேதம் இல்லாத தமிழகத்தை நீங்கள் உடைக்கப்பார்க்கிறீர்கள். அ.தி.மு.க.வையோ, அ.தி.மு.க. ஆட்சியையோ உடைக்க முடியாது. இதற்கு பிரதமர் மோடி இடம் கொடுத்துவிடக்கூடாது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசைக் கலைக்க முடியவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசைக் கலையுங்கள் என்று சுப்பிரமணியசாமி கூறுகிறார். ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் கலாசாரத்தோடு ஒன்றிப்போன ஒன்று. அதை எப்படி மாற்ற முடியும். அதில் கை வைக்கும் அரசு தூக்கி எறியப்படும். எனவே மோடி இது போன்ற மோசடி செயல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
தமிழகத்தை வேறு படுத்திக்காட்டினால் உங்களை வேறுபடுத்த எங்களுக்கு எத்தனை காலம் ஆகும். ஆட்சிக்கு வர இயலாத நிலையில் உள்ள அவர்கள் எங்களை பார்த்து குடும்ப ஆட்சி என்கிறார்கள்.
தமிழகத்தை காவிமயமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். எங்களைக் கவிழ்த்தால் மீண்டும் வருவோம். அழித்தால் மீண்டும் வருவோம். பா.ஜ.க.வில் எந்த பதவியிலும் இல்லாத குருமூர்த்தி அரசியல் செய்யும் போது நாங்கள் அரசியல் செய்வதில் என்ன தவறு? 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க. கட்சி இருக்கும். எந்தக் காலத்திலும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த கும்பல் நாங்கள் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசியலில் ம.நடராசனின் இந்தப் பேச்சு பலத்த அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது. அவருடைய பேச்சில் நாங்கள் பிராமணர்கள் இல்லை என்பதால் எங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பொதிந்திருக்கிற்து.
இதனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பிராமணப் பெண் என்கிற ஒரே காரணத்தால் அரசியலுக்குக் கொண்டு வந்து அதிமுகவைக் கைப்பற்ற பிராமணர்கள் முயல்கிறார்கள் அதற்கு பாசக அரசு துணைநிற்கிறது என்பதை நடராசன் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்,