பினாங்கு தைப்பூசத் திருவிழாவுக்காக காரைக்குடியில் தயாராகும் தங்கரதம்

பினாங்கு மலேசியாவின் ஒரு மாநிலம் ஆகும். பினாங்கு மாநிலம் பெர்லிஸ் மாநிலத்துக்கு அடுத்த படியாக மலேசியாவின் இரண்டாவது சிறிய மாநிலம் ஆகும். மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் 7வது இடத்தில் இருக்கிறது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் முதலாவது இடத்தில் இருக்கிறது.

ஜார்ஜ் டவுன், மாநிலத்தின் தலைநகராகும். மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அடுத்த மிகப்பெரிய நகரமாக உள்ளது.

ஜார்ஜ் டவுனில் 2017 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுமார் நான்கு கோடியே எண்பது இலட்சம் செலவில் தங்கரதம் ஒன்று தயாராகி வருகின்றது.

பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு காரைக்குடியில் இந்தத் தங்கரதம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே நாட்டுக்கோட்டை செட்டியார்களால் 120 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த வெள்ளிரதம் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக இந்தத் தங்கரதமும் பினாங்கு வீதிகளை அலங்கரிக்கவுள்ளது.

தைப்பூசத் திருவிழாவின் போது லிட்டின் இந்தியாவில் இருந்து ஜாலான் கெபுன் பூங்கா வரையில் இந்த இரண்டு இரதங்களும் இயக்கப்படவுள்ளன.

எனினும், இந்த இரண்டு இரதங்களும் செல்லும் வழித்தடங்களில் எந்த ஒரு குழப்பமும் இருக்காது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1.6 டன் எடையுள்ள இந்தத் தங்க இரதம் 4.3 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதோடு, இரண்டு தங்கக் குதிரைகளும் இரதத்தின் முன்பகுதியில் வைக்கப்படவுள்ளன. அதோடு, கலசம் மற்றும் பல்வேறு தெய்வ உருவங்களும் இரதத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வாரியத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ராமச்சந்திரன் கூறுகையில், “தங்க இரதத்தின் உட்பகுதி காரைக்குடியில் வடிவமைக்கப்பட்டது. அங்கிருந்து பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்டது. தங்க இரதத்தின் மற்ற பாகங்கள் தற்போது வடிவமைப்பில் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்” என்று நேற்று வியாழக்கிழமை ஜாலான் கெபுன் பூங்காவில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஹில்டாப் ஆலயத்தில் எம்.ராமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Response