மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரு மகன்.பெயர் கந்தர்வா.அச்சிறுவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம்,நான் தான் கீனோ என்னிடம் வா என்று அழைக்கிறது.சிறுவன் பயந்து நடுங்க பெற்றோர் அது என்ன? அதற்குத் தீர்வென்ன? என்று தேடுகிறார்கள்.அதன்பின் என்னவெல்லாம் நடந்தன? என்பதைச் சொல்வதுதான் படம்.
சிறுவன் கந்தர்வா, இந்தப்படத்தின் மையம் நாம்தான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.முதலில் பயந்து பின்பு துணிந்து ஆகிய எல்லா இடங்களிலும் சரியாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் மகாதாரா பகவத், நடுத்தர வர்க்க தந்தைகளின் பிரதிநிதி போல் இருக்கிறார்.வேலை செய்யுமிடம் வீடு ஆகிய எல்லா இடங்களிலும் அததற்கேற்ற உடல்மொழியை வெளிப்படுத்துகிறார்.மகனின் சிக்கல் கண்டு கலங்கும்போது நம்மையும் கலங்க வைக்கிறார்.
தாயாக நடித்திருக்கும் ரேணுசதீஷ் நன்று.வீடு வாங்கவேண்டுமென்ற அவருடைய ஆசையும் அவற்றின் விளைவுகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.
ராஜேஷ் கோபிசெட்டி,சுந்தர் அண்ணாமலை,கண்ணதாசன்,சிவம் உள்ளிட்ட நடிகர்களும் பொருத்தமாக இருக்கிறார்கள்.
ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு,கதைக்களத்தைப் புரிந்து அதற்கேற்ப அமைந்திருக்கிறது.பல காட்சிகளில் ஒளியமைப்பு வியக்க வைக்கிறது.
கிருத்திகா காந்தியின் படத்தொகுப்பு, கடைசிவரை படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை ஆகிய எல்லா வேலைகளையும் செய்து இயக்கியிருக்கிறார் ஆர்.கே.திவாகர்.கீனோவாக நடித்திருப்பதும் அவரே.
எதற்காக ஒரு உருவம் ஒரு சிறுவனைக் குறிவைத்துத் தொடர வேண்டும்? என்கிற கேள்விக்கான விடையை வெளிப்படுத்தும் போது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.அதுவே படத்துக்குப் பெரும் பலம்.அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்போடு படம் நகர்வது கூடுதல் பலம்.
– சுரேஷ்