இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக இந்திய எல்லையில் இருக்கும் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தானின் எல்லை கிராம மக்களுக்கு தங்களது பகுதி போரின் எல்லையாக இருக்கும் என்ற அச்சம் நிலவி வருகின்றது. ஏனெனில் பாகிஸ்தானின் இராணுவம் எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
மேலும் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதின்டா, சண்டிகர், பலோடி உத்தரலாய் மற்றும் பூஜ் ஆகிய இடங்களை பாகிஸ்தான் இராணுவம் குறிவைக்க முயன்றதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் எல்லை கிராமங்களில் அவ்வப்போது சைரன்கள் ஒலிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். மேலும் மின்வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முழுமின்தடையை அமல்படுத்தினார்கள். அமிர்தசரஸ், பதன்கோட், பெரோஸ்பூர் மற்றும் குருதாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாபின் பல எல்லை மாவட்டங்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் பதற்றத்துடன் இரவைக் கழித்தனர். இரவு நேரத்தில் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக பதன்கோட் பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் நேற்று காலை அமைதி நிலவியது.
இதேபோல் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் குஜராத்தில் கட்ச் மற்றும் பனாஸ்கந்தா மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையையும் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு மின்தடைக்கு உட்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி முதல் காலை 5.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட்டது.
எல்லையோர மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, சண்டிகர் நகர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, மே 9 காலை 9:30 மணியளவில் சண்டிகரில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், பால்கனிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக சண்டிகர் துணை ஆணையர் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு முழுமையாக மூடப்படும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பெய்ன்ஸ் தெரிவித்தார்.