மீன்பிடி தொழிலில் இருக்கும் நாயகன் லிங்கேஷ்,ஒரு வெளிநாட்டுப் பெண் லியாவுக்கு ஊர்சுற்றிக் காட்டுகிறார்.அப்போது லிங்கேஷ் மீது லியாவுக்குக் காதல் வருகிறது.லிங்கேஷுக்கும் அதில் சம்மதம்.அதேசமயம் லிங்கேஷை சிறுவயதிலிருந்தே காதலித்துக் கொண்டிருக்கிறார் திவ்யா.யாருடைய காதல் வென்றது? எனும் கேள்விக்கான விடைதான் படம்.
லிங்கேஷ்,அழுக்கு உடை,அடிதடி என்று மீனவராகவும் நாகரிக உடை நுனிநாக்கு ஆங்கிலம் என நவீனமாகவும் நடித்திருக்கிறார்.இரண்டிலும் பத்துப் பொருத்தங்கள் பக்காவாகப் பொருந்தியிருப்பது அவருடைய நடிப்புத் திறமைக்கான சான்று.
இலண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் லியா, தோற்றமே இரசிகர்களைக் கவரும்.அவர் காட்சிகளின் உணர்வுகளை உள்வாங்கி நடித்திருப்பது வியப்பு.
தனம் என்கிற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் திவ்யா,நம்ம ஊர் இளம்பெண்களைப் பிரதியெடுத்திருக்கிறார்.அத்தை மகன் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறார் என்று தெரியும் நேரத்தில் பின்னியெடுத்திருக்கிறார்.
மாறன்,கஞ்சாகருப்பு ஆகியோருக்குச் சிரிக்க வைக்கும் பொறுப்பு.அதைச் செய்திருக்கிறார்கள்.
மீனவ சமூகத்தினராக வரும் மதுசூதனன், காட்பாடி ராஜன் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
சாண்டி சாண்டல்லோ இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம்.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
டோனிசென், வெங்கடேஷ் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.கதைக்கேற்ற காட்சிகளை வடிவமைத்துப் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கோபி கிருஷ்ணா மற்றும் ரஞ்சித் ஆகியோர் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்திருக்கிறார்கள்.இவர் பார்த்துக் கொள்வார் என்றும் அவரும்,அவர் பார்த்துக் கொள்வார் என்று இவரும் விட்டுவிட்டார்கள் போல.
எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயலட்சுமி.இரு பெண்களின் மன உணர்வுகளை அவர் கையாண்ட விதத்தால்,அவரைத்தவிர வேறு யாரும் இதை இப்படிச் செய்யவியலாது என்று எண்ண வைத்திருக்கிறார்.தலைப்புக்கான நியாயத்தைக் கதையிலும் வைத்திருக்கிறார்.
– சுரேஷ்