அதிமுகவுக்கு தன்மானம் இல்லையா? – பிரகாஷ்ராஜ் கேள்வி

அரசியல் கருத்துகளை வலுவாகப் பேசி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது….

அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்க்கிறோம் என்பதைவிட எதிர்த்துதான் ஆக வேண்டும். என் வீட்டிலேயே கொள்ளையடிக்கிற பாஜகவை எதிர்க்காமல் நான் வேறு யாரை எதிர்க்க வேண்டும்? பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கவில்லை. பாஜகவுக்கு பின்னால் இருக்கிற இந்துத்துவா- மனுவாதி, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய சித்தாந்தங்களைப் பார்க்க வேண்டும்.

காந்தியை போலியாகக் கும்பிடுகிற பாஜகவுக்குள் கோட்சேக்கள் இருக்கின்றனர் என்பதை மறக்கக் கூடாது. நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கணும்? என்ன காரணத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்? 2026 தேர்தலின் மைய பிரச்சனையே இதுதான்.

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலானது என் நாட்டுக்கு துரோகம் செய்கிறவங்களுக்கு ஓட்டா? என் மாநிலத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டா? என்பதாகத்தான் இருக்கப் போகிறது.

தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் முக்கியமான மையமான பிரச்னையாக இருக்கும்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

Leave a Response