சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூடியதும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இயக்கத்துக்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் ஒரு தரப்பு அதிருப்தி அடைந்து நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இதனால் கூட்டத்தில் திடீரென சலசலப்பு நிலவியது. அப்போது, சாதி அடைப்படையில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சில நிர்வாகிகள் எழுந்து குற்றம்சாட்டினர். இதனால், கூட்டத்தில் இருதரப்பினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து வாக்குவாதம் நீடித்தது.
இதையடுத்து, முதன்மைச் செயலாளர் துரை வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டு அவர்களை இருக்கையில் அமரச் சொன்னார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காமல் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தகராறு முற்றியது. இந்நிலையில், தான் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் கோபமடைந்த துரை வைகோ பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து கடும் கோபத்துடன் வெளியேறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிர்வாகிகள் துரை வைகோவை நோக்கி ஓடினர். தாயகத்தை விட்டு வெளியேறி தனது மகிழுந்தில் ஏறினார். அவரது மகிழுந்தை மறித்த நிர்வாகி ஒருவர், ‘தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்றார். மற்றொரு நிர்வாகி அவர் முன்னேயே, ‘‘பதவிகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதை நான் சும்மா விடமாட்டேன் தீக்குளிப்பேன்’’ என்றார். இதனால் மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் முன்பு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
வைகோ, துரை வைகோ ஆகிய இருவரின் முன்னிலையில் இரண்டு தரப்பாகப் பிரிந்து சண்டை போட்டுள்ளனர்.இவர்களில் ஒரு தரப்பு வைகோ ஆதரவாளர்கள் எனவும் இன்னொரு தரப்பு துரை.வைகோ ஆதரவாளர்கள் எனவும் தகவல் பரப்பப்படுகிறது.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் இந்தத் தகவலால் பாமக போலவே மதிமுகவிலும் அப்பா மகனுக்கிடையே அதிகாரப்போட்டி நடக்கிறதா? என்கிற ஐயம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.