2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து, அடுத்த நாளே, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்று அமித்ஷா, பி.எல்.சந்தோஷ், ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்தார்.
இதையடுத்து, 2026 தேர்தலில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதனால், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
இதன்பின், பாஜக மாநிலத்தலைவர் போட்டியில் தான் இல்லை என்றும், யாரையும் கைக்காட்டவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜகவின் அடுத்த மாநிலத்தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. பாஜக மாநிலத் தலைவர் போட்டியில், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாகவும், அவரே புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இதற்காக, டெல்லியில் நயினார் நாகேந்திரன் முகாமிட்டுள்ளார். அங்கு, பாஜக மூத்த தலைவர்களை இரகசியமாகச் சந்தித்துப் பேசி வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஏப்ரல் 10 ஆம் தேதி) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 10.15 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா, பின்னர், கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார்.
அப்போது,எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் அவரைச் சந்திக்கவிருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருக்குமாறு எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்ட நிலையில் மற்ற நிர்வாகிகள் சென்னையில் தங்கியுள்ளனர்.
எடப்பாடி அணியினர் தவிர டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர், அடுத்தநாள், பாஜக தலைவர்களைச் சந்தித்து, மாநிலத்தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரிஅனந்தனின் மறைவையொட்டி சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு நேரில் சென்று, அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச்சந்திப்பு அனைத்தும் முடிவடைந்த பிறகு நாளை( ஏப்ரல் 11 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.