பத்திரிகையாளர்களைத் தாக்கிய பாஜகவினர் – எம்யூஜே கடும்கண்டனம்

திருச்சி, மன்னார்புரம் ரவுண்டானா அருகே நேற்று மாலை தமிழ்நாடு பாஜக சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழிக்கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் கறுப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொணடு பேசினர்.

இக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசத் தொடங்கும் போது, கூட்டத்தில் இருந்த பாஜக கட்சியினர் இருக்கையில் இருந்து எழுந்து கலைந்து செல்லத் தொடங்கினர். கூட்டத்தில் கட்சியினர் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன.

அந்நேரம், பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதையும் அப்போது கலைந்து சென்ற கூட்டத்தையும் தினகரன் புகைப்படக்காரர் சுந்தர் படம் பிடித்தார். இதைப் பார்த்த பாஜக கட்சியினர், புகைப்படக்காரையும், முன்னணி தொலைக்காட்சி நிருபரையும் அடித்து உதைத்தனர். மேலும் அவரது கேமிராவை பறித்து உடைத்தனர்.

பாஜகவினரின் இந்தத் தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு திருச்சி பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

திருச்சியில் நேற்று (23.03.2025) மாலை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சன் நியூஸ் செய்தியாளர் இஸ்லாம், தினகரன் புகைப்படக் கலைஞர் சுந்தர் ஆகியோர் மீது பாஜகவினர் நடத்திய தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

பத்திரிகையாளர்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் தடுக்கவேண்டிய பொறுப்பு பாஜக தலைமைக்கு இருக்கிறது. எனவே இந்த முறைகேடான செயலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Response