சைலண்ட் – திரைப்பட விமர்சனம்

ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை காவல்துறை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இவற்றை புவனேஸ்வரி எனும் பெண் செய்வதாக நம்புகிறது காவல்துறை. ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனை காவல்துறை பிடித்ததா? அந்தக் கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பனவற்றைச் சொல்வது தான் சைலண்ட் திரைப்படம். 

சமூகத்தில் ஒரு பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாகப் பேசும் படைப்பாக வந்திருக்கிறது இப்படம்.

இயக்குநர் கணேசா பாண்டி மிக அழுத்தமான களத்தைத் தேர்ந்தெடுத்து சுவாரசியம் குறையாமல் படத்தைத் தந்துள்ளார். முதல் பட சிக்கல்கள் குறைகள் தாண்டி ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை படம் தருகிறது. 

ஒரு கொலை அதைத் தொடர்ந்து விசாரணை பின்பு அடுத்தடுத்த கொலை, என விரியும் திரைக்கதையை அறிமுகப்படத்திலேயே எழுதி அசத்தியுள்ளார் சமய முரளி. காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு அசத்தலாக உள்ளது. 

இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேசா பாண்டியே  நடித்துள்ளார். இயக்கத்தை விட அவர் நடிப்பு பிரமாதம். 

மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாபாத்திரத்திற்கான உழைப்பத் தந்துள்ளார்கள். 

குறைந்த படெஜெட் என்றாலும் சேயோன் முரளி  ஒளிப்பதிவு படத்தை ஈடு செய்கிறது. படத்தொகுப்பு அளவு.

இசை சமயமுரளி அமைத்துள்ளார். ஆச்சரியம் முதல் படம் போல தெரியவில்லை, பாடல்கள் தேர்ந்த இசையமைப்பாளர் இசையமைத்தது போல உள்ளன. மூன்று பாடல்களுமே இரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையும் அட்டகாசம். 

படத்தில் கதை திரைக்கதையில் எந்த ஓட்டையும் இல்லை, ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் உருவாக்கத்தில் ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் தெரிகிறது. அவற்றைச் சரி செய்து, இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.புதிதான திரில்லர் இல்லையென்றாலும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தரும் டீசண்டான திரில்லர் படம். 

– ஆனந்த்

Leave a Response