மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு – விவரம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரசு (அஜீத் பவார்) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர்களாக தேவேந்திர பட்நாவிசும், அஜித் பவாரும் உள்ளனர்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26 ஆம் தேதியுடன் முடிகிறது.

அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா-காங்கிரசு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 தொகுதிகளை உள்ளடக்கிய ஜார்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக் காலம் அடுத்தாண்டு ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது.

எனவே மேற்கண்ட இரு மாநில சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடைவதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம். அதனால் இருமாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், சமீபத்தில் இரு மாநிலங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது…

மகாராஷ்டிராவில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 29 கடைசி தேதி. வேட்பு மனுக்கள் அக்டோபர் 30 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப்பெற நவம்பர் 4 ஆம் தேதி கடைசி நாள். நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9.63 கோடியாக உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜார்க்கண்ட் தேர்தல் தேதி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட்டில் முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கலுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத்துக்கு அக்டோபர் 29 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்போடர் 30 ஆம் தேதியும் நடைபெறும். முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 30 ஆம் தேதி கடைசி நாள். இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுககள் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 1. இரண்டு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

வயநாடு மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிப்பு

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து வயநாடு பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை இராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார்.அதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13 ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வரும் 30 ஆம் தேதி. நவம்பர் 13 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response