ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாகவும் (செப்டம்பர் 18, 25, அக்யோபர்.1), அரியானாவில் ஒரே கட்டமாகவும் (அக்டோபர் 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
காஷ்மீரில் கடந்த 2019 இல் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துள்ளது.அங்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டதால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நீடிக்கிறது. இம்முறை காங்கிரசு வெற்றி பெற்று அரியானாவில் ஆட்சியைக் கைப்பற்றும் என வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.
இதனால், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரசு, மார்க்சிஸ்ட், ஜேகேஎன்பிபிஐ ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகியன தனித்தனியே களமிறங்கின.
ஜம்மு காஷ்மீரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரசுக் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை பெற்றன.ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
தேசிய மாநாட்டுக் கட்சி 56 தொகுதிகளில் போட்டியிட்டு 42 இடங்களிலும்,39 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசு 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.ஒரே தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், அத்தொகுதியை வசமாக்கியது. ஜேகேஎன்பிபிஐ கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கிலும் தோற்றது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.இவர் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிறார்.
62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியது.81 தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்றது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அரியானா
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் பாஜக, காங்கிரசு ஆகிய கட்சிகள் நேருக்கு நேர் மோதின.ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டது.பகுஜன் சமாஜ் கட்சியுடன் இந்திய தேசிய லோக் தளமும்,கன்சிராம் அசாத் சமாஜ் கட்சியுடன் ஜனநாயக ஜனதா கட்சியும் (ஜேஜேபி) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் காங்கிரசு முன்னிலை வகித்தது. சில மணி நேரத்தில் பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது.பிற்பகலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது.
இறுதியில் பாஜக 48 இடங்களில் வென்று தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது.முதல்வர் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியிலும்,காங்கிரசு தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஷி சம்ப்லா-கிலோலி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
2019 இல் 40 தொகுதியில் வென்ற பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த நிலையில் இம்முறை பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நயாப் சிங் சைனி 2 ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.
காங்கிரசு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.2019 இல் 31 தொகுதிகளில் காங்கிரசு வென்ற நிலையில் இம்முறை கூடுதலாக 6 இடங்கள் கிடைத்துள்ளன. இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) 2 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
அரியானா வாக்கு எண்ணிக்கையில் பல தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக காங்கிரசுக் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.