நடிகர் விஜய் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் தமிழக வெற்றிக் கழகம்.அக்கட்சி சார்பாக அக்டோபர் 27 அன்று விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இப்போது அக்கட்சிக்குப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.
மாநாட்டு வேலைகளை முன்னின்று செய்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
வேலூர் நகரமெங்கும் ஒரு சுவரொட்டி ஓட்டப்பட்டுள்ளது. அதில்,தமிழ்நாட்டின் அனைத்து தளபதி இரசிகர்களயும் புறம்தள்ளும் திரு புஸ்ஸி என்.ஆனந்த்.தளபதி இரசிகர்களைப் புறக்கணிக்கும் பொதுச்செயலாளரை வேலூர் மாவட்ட தளபதி விஜய் இரசிகர்கள் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்கிற வாசகங்கள் உள்ளன.
இச்சுவரொட்டியை,முன்னாள் வேலூர் மாவட்ட தளபதி மக்கள் இயக்கம் சார்பாக வெளியிட்டுள்ளனர்.
வேலூர்,இராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய நகரங்களின் பெயரும் அச்சுவரொட்டியில் இடம்பெற்று அந்நகரங்களிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது.
அதை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்திருக்கிறார்கள்.
அதில்,வேலூரில் மட்டுமல்ல 38 மாவட்டங்களிலும் இப்படித்தான் நடக்கிறது தர்மபுரியிலும் மதுரையிலும் இதுபோன்ற எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்கிற கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விசாரித்தால், புஸ்ஸி ஆனந்த் விஜய்யிடம் வருவதற்கு முன்பே விஜய்க்கு தமிழ்நாடெங்கும் இரசிகர் மன்றங்கள் இருந்தன.அவை வேகமாகவும் செயல்பட்டு வந்தன.
அப்போதிருந்து வேகமாகச் செயல்பட்டு வந்த பலரை புஸ்ஸி ஆனந்த் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக அந்தந்த ஊரில் சிலரை உருவாக்கி அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விஜய்யிடம் முறையிடக்கூட முடியவில்லை என்று வேதனைப்படுகிறார்கள்.
பொதுவெளியில் இதுபற்றிப் பேசினால் எங்கள் தளபதிக்குத்தான் அவப்பெயர் ஏற்படும் என்பதால் மிகவும் அமைதி காத்து வந்தோம்.ஆனால் இப்போது கட்சி மாநாடு நடக்கிற நேரத்தில் எங்களுக்குக் கூடுதல் அவமானம் இழைக்கப்படுகிறது.அதனால் பொறுத்தது போதுமெனப் பொதுவெளிக்கு வந்துள்ளோம் என்கிறார்கள்.
விஜய் இதை கவனிப்பாரா?