தமிழக ஆளுநரின் தேநீர்விருந்து – இபொக விசிக புறக்கணிப்பு

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருட்டிணன் வெளியிட்ட அறிக்கையில்….

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்னை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட யாரும் பங்கேற்பதிலை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளது. நீட் உள்ளிட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளதைக் கண்டித்து ஆளுநரின் தேநீர் விருந்தை விசிக புறக்கணித்துள்ளது.

Leave a Response