செப்டம்பர் 15 க்குப் பிறகு தொடக்கப்பள்ளிகள் திறக்க முடிவு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 23 காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்…..

நடைமுறையில் உள்ள கோவிட்-19 நோய்ப் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 06.09.2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

1-9-2021 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.

• அனைத்துக் கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Colleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் 23-8-2021 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

• கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-8-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

• ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொதுப் பேருந்துப் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.

• நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

• தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2, FL 3) செயல்பட அனுமதிக்கப்படும்.

இவ்வாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Response