தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – சுகாதாரத்துறைச் செயலர் பதில்

சென்னையில் இன்று சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…..

19 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதில் தமிழகமும் ஒன்று. நாம் கடந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 7 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைப் பார்த்திருக்கிறோம். இருந்தபோதும் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு 450 என்ற நிலையில் தற்போது 1000 பேருக்குத் தொற்று ஏற்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இதற்கு மக்களின் தொய்வே முக்கியக் காரணம்.

முகக்கவசம் அணியாவிட்டாலும் கொரோனா வராது என்ற அலட்சியம் மக்களிடையே உள்ளது. தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று மக்கள் நினைக்கின்றனர்.

திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளாலும், அரசியல் நிகழ்ச்சிகளாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் அதிகக் கூட்டம் கூடுகிறது. அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. இதனால் தொற்று இன்னும் அதிகரிக்கலாம்.

கொரோனாவுக்குப் பாகுபாடு தெரியாது. குழந்தை, இளைஞர்கள், முதியோர்கள் என யாராக இருந்தாலும் முகக்கவசம் அணியாமல், கை கழுவாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் நிச்சயம் தொற்று பரவும்.

அரசியல் கூட்டங்களுக்காக பிரத்யேக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்றில்லை, எல்லாக் கூட்டங்களுக்கும் மூடிய அறைக்குள் 600 பேர்தான் இருக்க வேண்டும். திறந்த இடம் என்றால் இடத்தின் பரப்பளவில் 50 விழுக்காடு மக்கள்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அதைக் கவனித்துக் கொள்வர்.

அரசியல் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அனைத்துக் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும்”.

அபராதம் விதித்தால் மட்டுமே பொதுமக்கள் முகக்கவசம் அணிகின்றனர். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து காணப்பட்ட இடங்களில் இம்முறை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும். சென்னையில், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 3,400-க்கும் அதிகமான இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுவரை 16 இலட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 20 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனா மையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Response