எரிவாயு உருளை மேலும் 25 ரூபாய் உயர்வு – மக்கள் சாபம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு உருளை விலையையும் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு உருளை விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் இடையில் கூட மாற்றியமைக்கப்படும். அப்படித்தான் பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சமையல் எரிவாயு விலை உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு உருளை விலை ரூ.810-லிருந்து ரூ.835 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை உயர்ந்த நிலையில் மார்ச்சின் முதல்நாளான இன்றே மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. கடந்த சனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளை விலை ரூ.125 உயர்ந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மக்கள் வாழ்வாதாரம் பற்றிக் கொஞ்சமும் கவலையின்றி விலையை உயர்த்திக் கொண்டே செல்வதால் கடும் சாபத்துக்கு ஆளாகின்றார் மோடி.

Leave a Response