புரெவி புயல் அடுத்த சில மணி நேரங்களில் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும். தற்போது காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசுகிறது. 90 கி.மீ வேகத்தில் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. தற்போது மணிக்கு 16 கிமீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும்,தமிழகத்தில் தென் கடலோர பகுதிகளான பம்பன் – கன்னியாகுமரி இடையே இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புரெவி புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடியில் கன மழை பெய்யும். மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனக் கூறி உள்ளார்.
புரெவி புயல் காரணமாக நாளை சென்னை – தூத்துக்குடி இடையே செல்லும் பயணிகள் சிறப்பு தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நாளை தூத்துக்குடி -சென்னை மற்றும் தூத்துக்குடி -மைசூர் சிறப்பு ரெயில்கள் தூத்துக்குடி – மதுரை ரெயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக இரத்து செய்யப்படும். இந்தத் தொடர்வண்டிகள் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.