தனுஷ் ரசிகர்மன்ற விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் – செங்கல்பட்டில் பரபரப்பு

நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28. அவர் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் வி.சுப்ரமணியம் சிவா மற்றும் செயலாளர் பி.ராஜா ஆகியோர் ஆலோசையின்படி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாம்பரம் தி மு க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவைத் துவக்கிவைத்தார் .

ஊனமுற்றோர் 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 500 மேற்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, 1 மாதத்திற்கு தேவையா மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மற்றும் பிஸ்கெட், பால் பாக்கெட் ஆகிவை வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் தனுஷ் வினோத் செயலாளர் நூர் முகமது, மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் ஆகியோரின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்,

சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் ஆகியவை அணிந்தும் பாதுகாப்பான முறையில் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

அதோடு,

தோழா படத்தில் வருவது போல் கழுத்துக்குக் கீழ் உடல் செயலிழந்தது படுக்கையில் அவதிப்படும் சூர்யா என்ற இளம் பெண்ணிற்கு, சமூக ஆர்வலர் ஹரி கிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று, நடிகர் தனுஷ் பிறந்தநாளை ஒட்டி உதவிக் கரம் நீட்டியுள்ளனர் செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் மன்ற ரசிகர்கள்.

கூடுவாஞ்சேரியில் உள்ள அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று 1 மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற சமையல் பொருட்கள் வழங்கியதும் இன்றி, ஒரு நாளாவது அமர்ந்து உண்ண வேண்டும் என்ற கனவை நினைவாக்க சுமார் 16,000 ரூபாய் செலவில் மருத்துவமனையில் உபயோகிக்கப்படும் கட்டில் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

தனுஷ் ரசிகர் மன்ற விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டதால் தனுஷ் ரசிகர்கள் திமுக்வுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response