அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு செய்தி மிகவேகமாகப் பரவும், அதைப்பற்றிப் பலர் பேசிக்கொண்டிருப்பார்கள்.
கொரொனாவால் உலகம் மிரண்டுபோய்க் கிடக்கிறது, இந்திய ஒன்றியத்தில் அரசே அறிவித்த மக்கள் ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில் பரவும் ஒரு சிந்திக்க வைக்கும் பதிவு…..
அடங்கிக் கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்
சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை
மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றன,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன
தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை
மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்கத் தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்
மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்குத் தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ உலக நியதி என்றான்
உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்
ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்
ஓடினான், பற்ந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான், கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரைப் படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்
ஒரு கிருமி கண்ணுக்குத் தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லிக் கொடுத்தது பாடம்
முடங்கிக் கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்
பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்
மன்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்
முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது
மாமரத்துக் கிளி அவனைக் கேலி பேசுகின்றது, கண்ணீரைத் துடைகின்றான்
காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன
ஆட்டுமந்தைக் கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்குத் தோன்றுகின்றது
கொரோனாவுக்காக மனிதன் கைகழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு, மருத்துவமனையில் அவன் அடைபட்டுக் கிடப்பதைப் பார்த்துகொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி
நிறுத்திவைக்கபட்ட விமானங்களைப் பார்த்தபடி எக்காளச் சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து, நிறுத்தி வைக்கபட்ட கப்பலைக் கண்டு சிரிக்கின்றது மீன் இனம்
தெய்வங்கள் கூட தனக்காகக் கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதைச் சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்
கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளித்தள்ளிப் பூட்டுகின்றது ஆலயக் கதவு
அவன் வீட்டில் முடங்கிக் கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சிக் கேட்கின்றது சிட்டு, கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்
மரத்தில் கனியினைக் கடித்தபடி இதைப் பார்த்துச் சிரிக்கின்றது அணில், வானில் உயரப் பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு
தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கில் கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..
அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்