இந்தியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ப்ரிதிவ் ஷா களமிறங்கினர்.
தனது முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாடிய ப்ரிதிவ் ஷா 20 ரன்னிலும், மயங்க் அகர்வால் 32 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் ஷ்ரோயஸ் ஐயர் 103 ரன்களும், கே.எல்.ராகுல் 88 ரன்களும் கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் விளாசினர்.
அதனையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில், ஹென்ரி நிக்கோலஸ் களமிறங்கினர்.
கப்தில் 32 ரன்களிலும், நிக்கோலஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டாம் பிளன்டெல் 9 ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 171 ரன்களில் மூன்று விக்கெட் இழந்திருந்த நிலையில் ராஸ் டெய்லர் டாம் லதாம் இணை அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். லதாம் 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ராஸ் டெய்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 109 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டநேர இறுதியில் 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 348 ரன்கள் எடுத்தது.
அதன்மூலம் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.