தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
தி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க. ஆதரவுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் 6-ந் தேதியன்று வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.
வைகோவுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து சந்தேகத்தின் பேரில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவையும் மற்றொரு வேட்பாளராக தி.மு.க. நிறுத்தியது.
அ.தி.மு.க. சார்பில் ந.சந்திரசேகரன், முகமது ஜான் மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் 8-ந் தேதியன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு பரிசீலனையின்போது அவர்கள் 7 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டு, சுயேச்சைகள் 4 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். 6 காலியிடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்திருந்ததால் போட்டி இல்லாமல் போனது.
இதைத்தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி கி.சீனிவாசன் நேற்று மாலை அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ந.சந்திரசேகரன், முகமது ஜான், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் வந்தனர்.
3 பேருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சான்றிதழ்களை கி.சீனிவாசன் வழங்கினார். பின்னர் அவர்கள் கையெழுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
அதன் பின்னர் வைகோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன்,கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வந்தனர். அவர்களும் கி.சீனிவாசனிடம் சான்றிதழ்களைப் பெற்றனர்.
இதனால் 23 ஆண்டுகளுக்குப் பின் வைகோ பாராளுமன்றம் செல்கிறார். இதனால் மதிமுக தொண்டர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.