ரணில் உடனான மோதலில் ராஜபக்சே தோல்வி – சபாநாயகர் அறிவிப்பு

இலங்கையில் சிங்கள அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான மோதலில் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் 14 ஆம் தேதி கூட்டப்படும் என்று சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார்.

இருப்பினும் ராஜபக்சே குதிரைபேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்க வில்லை.

இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9 ஆம் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

ஆனால்,உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ரணில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்தனர். அந்த வழக்குகளில், தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.

இதன் முடிவில் நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை, அடுத்த மாதம், 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இந்த உத்தரவு சிறிசேனாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். அதன் படி இன்று காலை நாடாளுமன்றம் கூடியது

இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

கூட்டம் தொடங்கியது எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ரணில் விக்ரமசிங்கே எம்பிக்கள் அவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து இருந்தனர்.

நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவந்த நிலையில் ராஜபக்சே அவையில் இருந்து வெளியேறினார். ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று உள்ளது.

ராஜ பக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என ரணில் தரப்பு சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்து உள்ளார்.

இது ராஜபக்சேவுக்குப் பெரும் பின்னடைவு என்ரு சொல்லப்படுகிறது.

Leave a Response