
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதால், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை செப்டம்பர் 8 அன்று, 41 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,….
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட வேண்டும்.
விலை உயர்வால் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை ஜிஎஸ்டி முறைப்படி கொண்டுவரும் போது அனைத்து மக்களும் பயன் பெறுவார்கள்.
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக ஈரான், வெனிசுலா மற்றும் துருக்கி போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் உறுதியளித்த போதிலும் அதை நிறைவேற்றவில்லை. இது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
எனக் கூறினார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விலை உயர்வு நேரத்தில் மத்திய அரசின் வரி குறைக்கப்பட்டது என்று அக்கட்சி கூறியிருக்கிறது. அதுபற்றி எதுவும் பேசாமல் மற்றவர்கள் மேல் பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கிறார் மத்திய அமைச்சர்.
இதனால், மக்களை வாட்டி வதைக்கும் பெரும் சிக்கலில் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்கிறார் அமைச்சர் என்கிற விமர்சனங்கள் வருகின்றன.


