
அன்னா பொலிட்கோவ்ஸ்காயா விருது
பஸ்தூன் இனப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பாகிஸ்தான் சமூகச் செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில், மதவாதத்தை எதிர்த்துப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் ஆகிய இருவருக்கும் அன்னா பொலிட்கோவ்ஸ்காயா விருது வழங்கப்பட்டுள்ளது.உலகின் சிறந்த பெண் மனித உரிமைப் போராளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அங்கீகாரம் இது.
கடந்த 2006, அக்டோபர் 6 ஆம் தேதியன்று மாஸ்கோவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்காயா (1958-2006) நினைவாக அளிக்கப்படுகிறது.

விருது பெற்ற குலாலாய் இஸ்மாயில் பேசியதில் இருந்து…
எங்கள் உரிமைகளுக்காகப் பேசுகிறோம். மதத் தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசுவது எங்களது அடிப்படை உரிமை. இந்த விருதைப் பெறும் தருணத்தில், உலகின் பல பகுதிகளில் போர்கள், ஆயுத வன்முறை, இன அழிப்புகள் தொடர்கின்றன. பல மில்லியன் மக்களுக்கு அகதி முகாம்களே வீடுகளாக மாறியுள்ளன.
சுயமாக வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படும் மக்கள்.புதிய மத தீவிரவாத அமைப்புகள் உருவாகி வருகின்றன. ஒவ்வொரு புதிய குழுக்களும் கொடூரத்தையும் வன்முறையையும் வைத்திருக்கின்றன.
கெளரி லங்கேஷ், அரசு அதிகாரங்களிடம் உண்மையைப் பேசியதால் கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்த விருதைப் பெறும்போது, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், உலகில் இன்றும்கூட அதே நம்பிக்கைகள், விருப்பங்கள், போராட்டங்கள் இருந்துவருகின்றன
இவ்வாறு அவர் பேசினார்.
– சுந்தரபுத்தன்


