இந்தித்திணிப்பு சட்ட ஆணையை எரிப்போம் வாருங்கள் – பெ.மணியரசன் ஆவேச அழைப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் 22.04.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக!

இந்தியக் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட), ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப் பாட மொழியாக இருக்க வேண்டும், முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும், அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் 18.04.2017 அன்று, நடுவண் அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “மக்கள் தங்களுக்குள் தாய்மொழியில் உரையாடிக் கொள்வதைப் போலவே, இந்தி மொழியிலும் உரையாடிக் கொள்ள வேண்டும்” என அங்கு நடைபெற்ற “கூட்டு இந்தி அறிவுரைக் குழு”க் (Joint Advisory Committee for Hindi), கூட்டத்தில் கூறியுள்ளார்.
மேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே என்பதும் தெரிய வந்துள்ளது. அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது. ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே காங்கிரசு அமைச்சரவையில் அமைச்சராக அன்றிருந்த இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இப்பரிந்துரைகள் சட்டமாகும் வகையில் கையொப்பமிட்டுள்ளார்.
இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.
இந்திய அரசின் இந்த இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், வரும் மே 8 அன்று, சென்னை தியாகராயர் நகரிலுள்ள இந்திப் பிரச்சார சபை முன்பு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட இந்தித் திணிப்பு ஆணையின் நகலை எரிக்கும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ளது. இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் வகையில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென வேண்டுகிறோம்.
கோரிக்கைகள்-
1. மக்களவை மாநிலங்களவையில் முன் அனுமதி தேவைப்படாத நிலையில், அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேசுவதற்கான உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.
2. நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் அவற்றில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்.
தமிழை கட்டாய மொழிப்பாடமாக ஏற்றுக் கொள்ளாத நடுவண் வாரிய மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அவற்றைக் மூடச் செய்ய வேண்டும்

இத்தீர்மானத்தைத் தொடர்ந்து,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே 15 முதல் ஒரு வார கால தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

கீழடி ஆய்வாளர் அமர்நாத் குழுவினரை அசாமிற்கு இடமாற்றம் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்!

ஆகிய தீர்மானங்களும் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

Leave a Response