32 இணையதளங்களை இந்திய அரசு “தடை” செய்தது சரியா?

இந்தியாவுக்குள் இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களை தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம் என்கிற இணைய சுதந்திரத்திற்கான தன்னார்வ தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையதளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.

அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையதளங்கள் உள்ளிட்ட பல பிரபல இணையதளங்களின் பெயர்கள் இருக்கின்றன. அவை தவிர, உலக அளவில் இணைய ஆவணப்படுத்தலுக்கு புகழ்பெற்ற ஆர்கைவ் டாட்ஆர்க் என்கிற இணையதளமும், உலக அளவில் இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் பெரிதும் பயன்படுத்தும் கிட்ஹப் டாட்காம், சோர்ஸ்போர்ஜ் டாட்நெட் போன்ற முழுக்க முழுக்க தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பிரத்யேக இணையதளங்களும் கூட இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவுக்குள் சில இடங்களில் இந்த இணையதளங்கள் இன்னமும் காணக்கிடைத்தாலும் வேறுசில இடங்களில் இந்த இணையதளங்களை காணமுடியவில்லை என்று புகார்களும் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து இந்தத் தடைகள், இணைய சுதந்திர செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“பயங்கரவாத தடுப்பின் ஒரு பகுதியே இந்த தடைகள்”

இந்திய அரசு தரப்பில் இருந்து இந்த தடை குறித்த அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் முறையாக வெளியாகாத நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் அர்விந்த் குப்தா, இந்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு படைப்பிரிவின் ஆலோசனையின் பேரிலேயே இந்த தடை விதிக்கப்பட்டதாக தமது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான ஐசிஸ் அமைப்பின் பிரச்சாரத்தை செய்துகொண்டிருந்த அல்லது அதை செய்ய அனுமதித்துக்கொண்டிருந்த இணையதளங்கள் மட்டுமே இந்தியாவுக்குள் தடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்திய அரசின் பயங்கரவாத தடுப்புக்கான புலனாய்வுக்கு ஒத்துழைக்கும் இணையதளங்கள் மீதான தடைகள் படிப்படியாக விலக்கப்படும் என்றும் தெரிவித்திருந்த அர்விந்த் குப்தா, அப்படியான சில இணையதளங்கள் மீதான தடைகளை நீக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும், தமது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்திய அரசின் இந்த இணையதள தடை நடவடிக்கை இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்களின் கோபம் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது.

இந்திய அரசின் இந்த அணுகுமுறை அடிப்படையிலேயே தவறு என்கிறார் சென்னையில் இருக்கும் இணைய செயற்பாட்டாளரும் தொழில்நுட்ப வல்லுநருமான மணி மணிவண்ணன்.

இந்திய அரசு தடைசெய்திருக்கும் இணையதளங்களில் பலவற்றுக்கும் பயங்கரவாத பிரச்சாரம் என்று இந்திய அரசு கூறும் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரம் எவையும் தமக்குத் தெரியவில்லை என்று கூறும் மணி மணிவண்ணன், இந்திய அரசின் இந்த தடையால் ஏறக்குறைய இணையத்தின் பெரும்பகுதி இந்தியாவில் காணாமல் போகும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.

இந்திய அரசின் இந்த தடையை விதித்தவர்களுக்கு இணையத்தின் அடிப்படை செயற்படும் விதம் குறித்த பெரிய புரிதல் இருப்பதாக தெரியவில்லை என்று கூறிய மணி மணிவண்ணன், பயங்கரவாதத்தை இந்தியாவை விட அதிகம் எதிர்ப்பதாக கூறும் அமெரிக்காவில் கூட இந்த இணையதளங்கள் முடக்கப்படாதபோது, இந்தியாவில் இந்த இணையதளங்கள் பயங்கரவாதத்தடுப்பு என்கிற காரணத்தைக் காட்டி தடுக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்தார்.

-நன்றி பிபிசி தமிழ்.

Leave a Response