விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள்- சிங்கள இராணுவம் அனுபவிக்கிறது-அமைச்சர் ஐங்கரநேசன் வேதனை

 

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர்  பொ.ஐங்கரநேசன் 19.12.2014 அன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதி…..

வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய விவசாயம் மூன்று தசாப்த காலப் போரின் விளைவாகச் சீர்குலைந்து போயுள்ளது. போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டபோதும், வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று ஒரு வருடங்கள் கடந்துவிட்ட போதும் விவசாயப்பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்புவதென்பது எமக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.
இங்கே காங்கேசன்துறைமுனை தொடக்கம் வடக்கின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய் கொக்குத்தொடுவாய்வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வளம்மிக்க விவசாய பூமி படைமுகாம்களுக்கெனவும் குடியேற்றங்களுக்கெனவும் அரசால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. எல்லைக் காவலர்கள் இல்லாத காரணத்தால் நிலப்பறிப்பு இன்றும் நிகழ்ந்தேறிவருகிறது.

இந்தமண் வெறுமனே பயிர் விளையும் வயல்கள் அல்ல எமது விவசாயப் பெருங்குடிகளைப் பொறுத்த வரையில் பொன் விளையும் பூமி. மற்றைய எல்லாத் தொழிற்துறையினருடனும் ஒப்பிடும்போது, பொன்னோடும் பொருளோடும் சீரும் சிறப்புமாக ஒரு காலத்தில் வாழ்ந்தவார்கள் விவசாயிகள்தான். இன்று, பெரும்பாலான விவசாயிகள் மீள முடியாத அளவுக்குக் கடன் சுமையால் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள். அநேகமானோர்  விவசாயத்தைக் கைவிட்டுத் தினக்கூலிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்
பொதுமக்களின் விளைநிலங்கள் மாத்திரம் அல்ல வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உரித்தான நிலபுலங்கள்கூடப் படையினர் வசம் உள்ளன, வடக்கின் விவசாயத்தை மேம்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை நல்கிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணை, இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையம், கனகராயன்குளம் தாய்த் தாவரப் பண்ணை, புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் அலுவலகம், மன்னார் விவசாயப் பணிப்பாளார்அலுவலகம் என்று ஏறத்தாழ 425 ஏக்கர் பரப்பளவு படைத்தரப்பின் ஆளுகையின் கீழேயே உள்ளது.
விடுதலைப்புலிகள் தங்களது காலத்தில் முல்லை மாவட்டத்தில் முத்தையன்கட்டிலும், தேராவிலிலும், மன்னார்மாவட்டத்தில் வெள்ளாங்குளத்திலும் பண்ணைகளைத் திறம்பட நிர்வகித்து வந்தார்கள். திரைகடலோடி அரிய பயிர்த் திரவியங்கள் பலவற்றைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினார்கள். இன்று, இந்தப் பண்ணைகளையும், கறையான் புற்றெடுக்கப் பாம்புகள் குடிகொண்ட கதையாகப் படையினரே ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
எமது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களான முத்தையன்கட்டுக் குளத்தினது நீரேந்து பரப்பிலும், விசுவமடுக் குளத்தினது நீரேந்து பரப்பிலும் எமது அனுமதியின்றிச் சட்டத்துக்கு முரணாகப் படையினர் பெரும் பண்ணைகள் அமைத்துப் பயிர் செய்து கொண்டிருக்கிறார்கள். எமது மக்களின் விளைநிலங்களிலும், மாகாண அரசுக்கு உரித்தான நிலங்களிலும் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் படையினர் உற்பத்திகளைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நிலக்குத்தகை இல்லை, வங்கியில் கடன்பட்டு மாதாமாதம் எங்களது விவசாயிகள் போன்று வட்டி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இதனால், சந்தை மதிப்பை விடக் குறைந்த விலைக்கு வந்தது இலாபம் என்று விற்று வருகிறார்கள். இதனால் எமது விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
படையினர் எமது நிலங்களில் பயிர் செய்துகொண்டு மாத்திரம் இருக்கவில்லை. எமது பசுக்களில் பால் கறந்து கொண்டும் இருக்கிறார்கள். மன்னராட்சிக் காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும்போது முதலில் அந்நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வார்கள் என்று இலக்கிப் பதிவுகள் உள்ளன. அது இங்கும் நிகழ்ந்தேறியிருக்கிறது. கால்நடைவளர்ப்பில் சிறந்து விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பை இராணுவம் முற்றுகையிட்டு மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பிய பின்னர் நல்லின மாடுகளையும் ஆடுகளையும் தங்கள் முகாம்களுக்குக் கவர்ந்து சென்றுள்ளார்கள். மீள்குடியேறிய மக்களிடம் இவை முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. அது மாத்திரம் அல்ல் இராணுவம் கால்நடைகளின் கடத்தலுக்கும் துணைபோகின்றது. பொதுமக்கள் யாரேனும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்குத் தனது ஒரு கால்நடையையேனும் கொண்டு செல்வதாக இருந்தாற்கூட, கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்திடம் முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அம்மாடுகளின் காதுகளில் கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தின் இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் எடுத்துக் செல்லப்படின் அது கடத்தலாகவே கருதப்பட்டு அப்பொதுமகன் தண்டிக்கப்படுகிறார். கால்நடைத் திருட்டைத் தடுக்கவும், கால்நடைகளிடையே தொற்றுநோய் பரவாமல் இருக்கவுமே இந்த ஏற்பாடு. ஆனால், இங்கு எமது கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், எங்கிருந்து எப்போது யாரால் எடுத்து வரப்பட்டன என்று தெரியாமல், நூற்றுக்கணக்கான பசுக்கள் அண்மையில் இராணுவத்தின் பங்கேற்புடன் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் வடக்கில் தேவைக்கு அதிகமாகப் படையினரை அரசாங்கம் நிலை கொள்ள வைத்திருப்பதே காரணம் ஆகும். போர்க்காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் தென்னிலங்கை இளைஞர்களையும் யுவதிகளையும் உள்வாங்கிப் படைப்பலத்தைப் உப்பிப் பெருப்பித்த அரசாங்கத்துக்குப் போர் முடிந்த பின்னர் அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால் அவர்களை மரக்கறி வியாபாரம்தொடங்கிப் பலசரக்கு வியாபாரம் வரை வாணிபத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
வடக்கின் யதார்த்தம் இவ்வாறு இருக்கும்போது, எமது மக்களுக்கு நிலக்கடலை விதைகளையும், விதை நெல்லையும், கால்நடைகளையும், கோழிக்குஞ்சுகளையும் வழங்குவது மட்டுமே விவசாய அமைச்சின் பணியாக இருக்க முடியாது. இதை மட்டுமே செய்வதென்றால், இதற்கென அரசசார்பற்ற நிறுவனங்கள் பல இங்கே இருக்கின்றன. இதனால்தான், எம்மைத் தங்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து இந்தச் சபைக்கு அனுப்பிய எமது மக்களின் வாழ்வுரிமைகளையும் தொழில் உரிமைகளையும் பறிக்கும் விதமாக அவர்களது நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
எதிர்க்கட்சியினர் நாம் இராணுவத்தை வெளியேறச் சொல்வதை விடுத்து அபிவிருத்தியில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்திச் செய்யக்கூடிவற்றையும் நாம் செய்யாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியும் வருகிறார்கள். எங்களுக்கு இருக்கும் அதிகாரம் எத்தகையது என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. எமது மாகாண விவசாயப் பணிப்பாளாரின் கீழ் ஒவ்வொரு மாவட்டங்களுக்கென்றும் பிரதி விவசாயப் பணிப்பாளார்கள் உள்ளார்கள். ஆனால், மத்திய அரசு இப்போது மாவட்டச் செயலகங்களில் மாவட்ட விவசாயப் பணிப்பாளரை நியமித்து எமது பிரதி விவசாயப் பணிப்பாளரின் பணிகளில் தலையீடு செய்து வருகிறது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் யாவும் மாகாணசபையின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றபோதிலும் இதுவரை இக்குளங்கள் எமக்குக் கையளிக்கப்படவில்லை. இதைப்போன்று ஏராளமானவற்றை நாம் பட்டியலிட முடியும். ஆனால், நமக்கு இருக்கின்ற அற்ப அதிகாரங்களையும் ஒதுக்கப்படுகின்ற சொற்பநிதியையும் பயன்படுத்தி எமது சக்திக்கும் மேலாகவே உழைத்து வருகின்றோம் என்று இந்த கௌரவ சபையில் அழுத்திக் கூறிவைக்க விரும்புகிறேன்.

 

Leave a Response