அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2023 ஜூன் மாதம் கைது செய்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகவும் பதவியேற்றார்.
இந்த நிலையில், அவருக்கு வழங்கிய பிணையை இரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி பிணை பெற்ற செந்தில் பாலாஜி, பிணை கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு எதிராகச் சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் சாட்சிகளைக் கலைக்க முற்படுவதாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ‘சாட்சிகளைக் கலைப்பார் என்ற அச்சம் இருந்தால், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்’ என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அவர் அமைச்சராக பதவியேற்பதற்காக அல்ல. மெரிட் அடிப்படையிலும் அவருக்கு பிணை வழங்கவில்லை. பிணை வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு பிணை வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பினர் அதோடு,
இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் எங்களுக்கு அனைத்தையும் தெளிவுப்படுத்த வேண்டும். அதாவது அதில் அமைச்சர் பதவி தான் செந்தில் பாலாஜிக்கு முக்கியமா? அல்லது வழங்கப்பட்ட பிணை முக்கியமா என்று தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதனால் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வாரா? இல்லையா? என்கிற கேள்வி அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவர் மனதிலும் உள்ளது.
இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவி ஏற்றது முதலமைச்சரின் உரிமை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த வழக்கின் அடிப்படையில் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படாது என்கின்றனர்.