திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ் பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பந்தக் கால் முகூர்த்தம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற்றது. 20 ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை 63 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலய கருப்பர் ஆபிஷேக ஆராதனை மற்றும் திருவீதியுலா நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று உபயதாரர் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தலைவர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பின் சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது….
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஜெயலலிதா கொடுத்த மக்களாட்சியை மீண்டும் கொண்டு வருவோம். ஜெயலலிதா ஆட்சியின்போது மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினார். மக்கள் தன்னுடன் உள்ளதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு மிக மிக அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது.அப்போது அதிமுக ஒருங்கிணையுமா? என்கிற கேள்வியை அமித்ஷாவிடம் கேட்டபோது,அது அதிமுகவின் உட்கட்சிச் சிக்கல் அதில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று கூறினார்.
வெளியில் அப்படிச் சொன்னாலும் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
அதை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக கொடி, ஜெயலலிதா படம் ஆகியனவற்றை டிடிவி.தினகரன் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி தொடர்ந்திருந்த வழக்கை எடப்பாடி பழனிச்சாமி திரும்பப் பெற்றுக் கொண்டார்.
டிடிவி.தினகரன், ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.எங்களுடன் இணைவார் என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
அதேசமயம் இதுவரை சசிகலா நிலை என்ன? என்பது தெரியாமல் இருந்தது.அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்தார்.
அமைதி கலைத்து நேற்று அவர் அளித்துள்ள பேட்டியில்,வரும் சட்டமன்றத் தேர்தலில் என் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
இதன்மூலம் அவரும் 2026 தேர்தலின்போது அதிமுகவில் இணைந்து பணியாற்றப் போகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது என அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாகத் தெரிவித்துவருகிறார்கள்.
என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்?