18 ஆவது மக்களவைக்கான தேர்தலில்,தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் சேர்ந்தது பாமக.மொத்தம் பத்து தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, தருமபுரி தொகுதியில் இரண்டாமிடத்தையும், எட்டு தொகுதிகளில் மூன்றாமிடத்தையும், கள்ளக்குறிச்சி தொகுதியில் நான்காமிடத்தையும் பெற்றிருக்கிறது.
திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய ஆறு தொகுதிகளில் கட்டுத்தொகையை இழந்திருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு 5.5 விழுக்காடு வாக்குகள் பெற்ற அக்கட்சி, இப்போது 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
இதற்குக் காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான்.
தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மருத்துவர் இராமதாசு,ஜி.கே.மணி ஆகியோர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதுதான் நல்லது என்று கூறினார்கள். ஆனால் அன்புமணிதான் பிடிவாதமாக பாஜக கூட்டணிக்குப் போகவேண்டும் என்று சொன்னார்.அதற்கு அவர் சொன்ன காரணம், பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் அப்போது நம் கட்சி சார்பில் எனக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதுதான்.அதனால் மருத்துவர் இராமதாசு மகனுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மதிப்பிழந்தது மட்டும்தான் நடந்திருக்கிறது.மீண்டும் பாஜக தான் ஆட்சியமைக்கிறது என்றாலும் அன்புமணிக்கு அமைச்சர் பதவி என்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
இதனால்,அய்யாவை மதிக்காமல் அன்புமணி செயல்பட்டார்.அதன் விளைவுகளை தற்போது அனுபவிக்கிறார் என்று பாமகவினரே அன்புமணியை விமர்சனம் செய்துவருகிறார்கள்.