தலித்துகள் கொடியேற்றத் தடையா? – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாதிய பாகுபாடு காரணமாக தேசியக் கொடி ஏற்றுவதில் சிக்கல் இருப்பதாக அரசுக்குத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்…..

சுதந்திர தினத்தன்று தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சி வரை அனைத்துத் தலைமை அலுவலகம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைப்பது மரபு. ஒரு சில கிராமங்களில் சாதிய பாகுபாடு காரணமாக தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசியக் கொடியை ஏற்றுபவரையோ அல்லது அதனை ஏற்றுபவர்களை அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் வந்துள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். மேலும் அது எந்த வடிவத்தில் செயல்பட்டாலும் அதனைத் தடை செய்யவேண்டும். தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 1989 ஆம் ஆண்டு சட்டத்தின் படி பட்டியலினத்தவர், பழங்குடியினர் அல்லாத எவரும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தவர், பழங்குடியினத்தை சேர்ந்த நகராட்சி, ஊராட்சித் தலைவர், உறுப்பினர் அலுவலகப் பணியில் இருக்கக் கூடிய எவரையும் அவர்களது அலுவலகப் பணிகளையும், கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பது அல்லது அச்சுறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு வரும் 75 ஆவது சுதந்திரதின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்யவேண்டும்.

இதனைத் தொடர்ந்து சுதந்திரத்தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்வதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்யவேண்டும்.

இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் போதுமான காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளை கையாளுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அல்லது அலுவலர்களை அறிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response