மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர் – அதிமுக அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மக்களின் நலன் கருதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நேரடியாகச் சென்று நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், ‘ஏழைகளுக்கு உணவளிப்போம்’ என்ற திட்டம் மூலம் நாளொன்றுக்கு இலட்சம் பேருக்கு உணவளிப்போம். பட்டினியில்லா சூழலை உருவாக்குவோம். இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையல் கூடங்களை அமைத்து உணவுகளை வழங்கப்போகிறோம் என்றும் பேரிடர் காலத்தில் உணவின்றித் தவிப்போருக்கு கொண்டு சேர்ப்போம் என்றும் தி.மு.க தலைவர் கட்சி தொண்டர்களுக்கு அண்மையில் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் தி.மு.க தலைவரின் உத்தரவின் பேரில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் முழுவீச்சில் நிவாரணப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகம் முழுவதும் நிவாரணப் பணி நடந்துவரும் நிலையில் தி.மு.க மூலம் பலன் பெற்ற பலரும் தி.மு.க தலைவருக்கு தங்களது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தி.மு.கவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் பயனடைந்த அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “‘ஒன்றிணைவோம் வா’ மூலம் உதவி பெற்ற பல லட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அ.தி.மு.க உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான். தி.மு.கவின் இத்தொண்டு என்றும் தொடரும்!” எனத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க உறுப்பினர் எழுதிய அந்தக் கடிதத்தில், “உயர்திரு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கு.தங்கராஜ் ஆகிய நான் மரியாதையுடனும், வணக்கத்துடனும் எழுதிய வாழ்த்து மடல். தாங்கள் செய்த ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் ஒரு அ.தி.மு.க உறப்பினர். ஆனால் தற்போது அதைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த அரசு மக்கள் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத அரசாக உள்ளது.

வெறும் ஆயிரம் ரூபாய், ரேஷன் அரிசி, இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? நீங்கள் கூறிய ரூ. 5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. இந்தக் கட்சியில் இருந்ததற்காக வெட்கப்பட்டு, உறுப்பினர் அட்டையை கிழித்துவிட்டேன். இனி என் வழி தளபதி வழியாக. ஈரோடு மாவட்ட செயலாளர் அவர்களின் கீழ் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு தங்களின் அனுமதியும் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன்” என்று எழுதியுள்ளார்.

அதிமுக தொண்டரின் இந்தக்கடிததால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response