கால்பந்து திருவிழா – முதல் போட்டியில் ரஷ்யா அபார வெற்றி

ரஷ்யாவில் வண்ணமயமான விழாவுடன் உலக கோப்பை கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது. முதல் லீக் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் இம்முறை ரஷ்யாவில் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இத்தொடரில், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா உட்பட 32 அணிகள் 8 பிரிவுகளாக மோதுகின்றன.உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இத்தொடர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு வண்ணமயமான துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுமார் 80,000 ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திரம் ரொனால்டோ, போட்டியின் சின்னமான ‘ஸாபிவாகா’வுடன் (ரஷ்யாவின் ஓநாய் இனம்) நுழைய கரகோஷத்தால் லஸ்னிகி ஸ்டேடியத்தில் அதிர்ந்தது.

அதைத்தொடர்ந்து இங்கிலாந்தின் பிரபல பாடகர் ராபி வில்லியம்ஸ், ரஷ்ய பாடகி எய்டா கேரிபுல்லினா இருவரும் இசை மழை பொழிந்தனர். கண்கவர் நடனம், ஜிம்னாஸ்டிக் சாகசங்களுடன் அரை மணி நேரம் கலை விருந்து படைக்கப்பட்டது.

பின்னர், சரியாக இரவு 8.30 மணிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உலக கோப்பை தொடரை முறைப்படி தொடங்கி வைத்தார்.ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் நாடான ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் முதல் லீக் போட்டியில் மோதின.

ஆரம்பத்தில் இருந்தே ரஷ்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அந்த அணியின் காஸின்ஸ்கை 12வது நிமிடத்திலும், செரிஷேவ் 43வது நிமிடத்திலும் அபார கோல் அடித்தனர். இதன் மூலம் முதல் பாதியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து 2வது பாதியிலும் ரஷ்ய அணியே சிறப்பாக ஆடியது. சவுதி அரேபிய வீரர்களின் தடுப்பாட்டம் பலவீனமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட ரஷ்ய அணியின் ஆர்டம் ஜயுபா 71வது நிமிடத்தில் அற்புதமான கோல் அடித்தார். ரஷ்யாவின் அதிரடிக்கு சவுதி அரேபியாவால் கடைசி வரை பதிலடி தர முடியவில்லை.

இறுதியில், 90வது நிமிடத்தில் 2 கோல் அடித்து ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. உலக கோப்பை தொடரில் போட்டியை நடத்தும் நாடு இதுவரை தோற்றதில்லை என்ற வரலாற்றையும் ரஷ்யா தக்க வைத்தது.

Leave a Response