ஐபிஎல் – தோனியின் அதிரடியால் சென்னை வெற்றி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில்
ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக முதலில் பேட்டிங் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களான டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் 2 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பிறகு விஸ்வரூபம் எடுத்தது. இதனால் சென்னை அணியின் ரன்வேகம் மள மளவென உயர்ந்தது. தொடர்ந்து டெல்லி அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்த ஷேன் வாட்சன் பந்தை அவ்வப்போது எல்லைக் கோட்டைத் தாண்டி பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கினர்.

ஆட்டத்தின் 10.5-வது ஓவரில் டூ பிளசிஸ் (33 ரன்கள்) விஜய் சங்கர் பந்து வீச்சில் தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரெய்னா வெறும் ஒரு ரன் எடுத்து மேக்ஸ்வெல் பந்து வீச்சில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு, ஷேன் வாட்சனுடன் கை கோர்த்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷேன் வாட்சன் (78 ரன்கள், 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, ராயுடுவுடன் இணைந்தார். டிரண்ட் போல்ட் வீசிய 16-வது ஓவரை எதிர்கொண்ட தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஒரு முனையில் அம்பதி ராயுடு (41 ரன்கள்) அதிரடி காட்ட, மறுமுனையில் டெல்லி அணியினரின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய தோனி 22 பந்துகளில் 51 ரன்கள் (5 சிக்ஸர்கள், 2 பவுண்டரி) குவித்து மாஸ் காட்டினார். இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக விஜய் சங்கர், மேக்ஸ்வெல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி ஷா 9(5) ரன்களும் காலின் முன்ரோ 26(16) ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆசிப் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர்.

அடுத்து ஆட வந்த தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் 13(14) ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 6(5) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆகி நடையைக்கட்டினார். பின்னர் அதிரடியாக விளையாடிய ரிஷாப் பாண்ட் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியில் கலக்கி வந்த ரிஷாப் பாண்ட் 79(45) ரன்களில் லுங்கி நிகிடி பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கடைசிவரை போராடி அதிரடியில் கலக்கிய விஜய் சங்கர் 54(31) ரன்களும், ராகுல் டிவாடியா 3(4) ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் சார்பில் ஆசிப் 2 விக்கெட்டும், ஜடேஜா, நிகிடி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

Leave a Response