போய் வா நதியலையே – நா.காமராசனுக்குப் பிரியாவிடை கொடுக்கும் தமிழகம்

தமிழகத்தில் புதுக்கவிதைகளுக்கு வழிசமைத்த வானம்பாடி இயக்கத்தின் முதன்மையாளர், 600–க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நா.காமராசன் சென்னையில் மே 24 ஆம் நாள் இரவு மரணம் அடைந்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே…’ என்ற பாடல் எழுதியதன் மூலம் வெகுமக்களிடையே புகழ் பெற்றார் பாடலாசிரியர் நா.காமராசன். ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது…’, ‘தங்கமகன்’ படத்தில் ‘அடுக்கு மல்லியே…’, பாலுமகேந்திரா இயக்கிய ‘மறுபடியும்’ படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு…’ உள்பட 600–க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதி இருந்தார்.

ஏராளமான புதுக்கவிதைகளை எழுதி, பல விருதுகளைப் பெற்று உள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவைக் கவிஞராக பதவி வகித்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதையும் பெற்றிருந்தார்.

வானம்பாடி இயக்கதின் முதன்மையான கவிகளில் ஒருவர் நா.காமராசன்.அவருடைய கறுப்பு மலர்களைப் படித்துவிட்டு எழுதவந்தவர்கள் பலர்.

கடந்த சில மாதங்களாகவே நா.காமராசன் உடல்நலக்குறைவாக இருந்தார். மே 24 இரவு அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 9 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கு சென்னையில் மே 25 (வியாழக்கிழமை) நடக்கிறது.

மரணம் அடைந்த நா.காமராசனுக்கு வயது 75. அவருடைய சொந்த ஊர் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமம் ஆகும். பல வருடங்களாக சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருடைய மனைவி பெயர் யோகமணி. இவர்களுக்கு தைப்பாவை என்ற மகளும், திலீபன் என்ற மகனும் இருக்கிறார்கள்.

அவர் வழி வந்த கவிஞர் பட்டாளமும் தமிழக மக்களும் போய் வா நதியலையே என்று அவருக்குப் பிரியாவிடை கொடுக்கின்றனர்.

Leave a Response