நீலகிரி கூடலூரில் பறிபோகும் தமிழர் நிலம் – உணர்வாளர் தரும் அதிர்ச்சித் தகவல்

தமிழக, கேரள எல்லையான கூடலூரில் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் என்று பல்வேறு நிகழ்வுகள் மூலம் சொல்லப்பட்டுவந்தது. தற்போது அங்கு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படும் நிகழ்வு தமிழக எல்லைக் கோட்டையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. தமிழக எல்லைக்குள் இருக்கும் ஒரு கட்டிடத்துக்கு கேரள மின்வாரியம் மின் இணைப்பு கொடுத்துள்ளது என்னும் அதிர்ச்சியான தகவலை பிரகாசு என்பவர் முகநூலில் எழுதியுள்ளார்.

அவருடைய பதிவில்,

நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாளூர் தமிழக கேரள எல்லை. ஒரு எல்லை சோதனைச்சாவடி, ஒரு ஆற்றுப்பாலம் இது மட்டும் தான் தமிழ்நாடு கேரளாவிற்கு இடைப்பட்ட பகுதி. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நேரத்தில் ஓடுகிற ஆற்றில் ஒரு பாதி கேரளாவிற்கும் ஒருபாதி தமிழ்நாட்டிற்கும் என ஆற்றை மையமாக வைத்து எல்லை பிரித்தார்கள். ஆற்றை ஒட்டிய பகுதியில் தான் இன்று ஒரு புதிய சிக்கல்.
கேராளாவில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் செய்ய வந்த ஏ.பி.பி என்ற ஒப்பந்தகாரர் ஒருவர் நீலமலை மாவட்டத்தில் பல நெடுஞ்சாலைகளையும், சிறு சிறு சாலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சாலை பணிகளை மேற்கொண்டார்.
தற்போது தாளூர் பகுதியில் ஒரு பெரிய வணிக வளாகத்தை கட்டி கடைகளை வாடகைக்கு விட்டார். ஆனால் தமிழ்நாட்டிற்கு சொந்தமான இடத்தை கேரளாவிற்கு சொந்தம் எனக்கூறி ஆவணம் தயாரித்து, பட்டா எண் பெற்றதோடு, கேரள மின்வாரியத்திலிருந்து மின்னிணைப்பும் பெற்றிருக்கிறார். எல்லைக்கோட்டிலிருந்து 50 மீட்டர் உள்ளே தமிழர் நிலத்தை கேரளாவிற்கு உரியது என சொந்தம் கொண்டாடி வருகிறான். இதற்கு வருவாய்த்துறை, கிராமநிர்வாக அலுவலர், காவல்துறை என அதிகாரிகளின் ஆதரவு வேறு. நாம் அவ்விடத்தை ஆய்வு செய்தபோது தான் தெரியவந்தது தமிழ்நாட்டிற்குள் பல இடங்களில் கேரள அரசு பட்டா கொடுத்திருப்பது. வெகு விரைவில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
இனி ஒருபிடி மண்ணையும் இழக்க இயலாது.

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் உண்மைத்தன்மையை ஆதாரத்தோடு அறியும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம். இது தொடர்பான ஆதாரம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Response