
பூலித்தேவர் ஒரு சரித்திரம், வரலாற்றை எப்படி எழுதுவது என்கிற அடிப்படை கோட்பாடுகளற்ற நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை மனதில் வைத்தே நாம் நமது மண்ணின் மைந்தர் பூலித்தேவரை நோக்கவேண்டியதிருக்கிறது…1755 ம் ஆண்டிலேயே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி படைகளோடு மோதி வென்ற பூலித்தேவரை கவனமாய்த் தவிர்த்துவிட்டு….1857 ம் ஆண்டு நடந்த சிப்பாய்களின் கலகத்தை முதல் இந்திய சுதந்திர போர் எனும்போதே இந்திய வரலாற்றுத்துரோகத்தை நாம் உணரமுடியும்.
ராபர்ட் ஓம் என்கிற ஆங்கிலேயர் எழுதிய “இந்துஸ்தானத்தில் ஆங்கில ராணுவ நடவடிக்கைகளின் வரலாறு” என்ற நூல் 1764 ல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.அந்த நூல் 1291 பக்கங்களைக்கொண்டது.அந்த ஆங்கிலேயன் ராபர்ட் தெள்ளத்தெளிவாக பூலித்தேவரை படம்பிடித்து தனது நூலில் காட்டியபின்னும்இந்திய வரலாற்றாசிரியர்களுக்கு பூலித்தேவரைக் கண்ணுக்குத்தெரியவில்லை.ஒரே காரணம் பூலித்தேவர் தமிழனாகப்பிறந்ததே.
1715 ல் இந்த தாய்த்தமிழ் நிலத்தில் சித்திரபுத்திர தேவருக்கும்-சிவஞான நாச்சியாருக்கும் மகனாகப் பிறக்கும்போதே ஒரு சரித்திரம் பிறந்து விட்டதாகவே நெற்கட்டான் செவ்வல் பூரித்து மகிழ்ந்திருக்கிறது…பின்னாட்களில் பூலித்தேவர் அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்குத் தேவையான வரலாற்றை கொடுக்கப்போகிறார் என்பதற்கான சான்றுகள் அன்றே வெளிப்பட்டதால்தான்…ஒடுக்கப்பட்ட குடியைச்சேர்ந்த வெண்ணிக்காலாடியும்….ஒண்டிவீரனும் பூலித்தேவரோடு ஒன்றாய்க் களத்தில் நின்றது.
எல்லாவற்றுக்கும் தானே உதாரணமாய் வாழ்ந்தவர் பூலித்தேவர்…பொது எதிரியை வீழ்த்துவதற்கு என்ன செய்வது என்ற பாலபாடத்தை நமக்கு நடத்துகிறார்.ஆங்கிலேய படைகளை எதிர்ப்பதற்கு முதன்முதலில் ஒரு கூட்டணியை அமைத்த பெருமை அவரையே சாரும்.1755 ல் ஆங்கில கர்னல் ஹெரான் ஆற்காடு நவாப் துணையோடு களக்காட்டைத் தாக்கிக் கைப்பற்றிவிட்டான் என்று தெரிந்ததும்தனக்கு அருகே இருந்த கொல்லங்கொண்டான்-தலைவன்கோட்டை-நடுவக்குறிச்சி-சொக்கம்பட்டி-சுரண்டை-ஊர்க்காடு-ஆகிய ஜமீன்களோடு ஒரு கூட்டு வைத்து களத்தில் இறங்கினார்.
இதில் கவனமாக திருவிதாங்கூர் மன்னரை இணைத்ததுதான் பூலித்தேவரின் ராஜதந்திரம்.இதைப்பார்த்துதான் தென்தமிழகத்தின் பல கூட்டணிகள் உருவானது.சிவகங்கை ராமநாதபுரம் கூட்டணி…பாஞ்சாலங்குறிச்சி கூட்டணி…திண்டுக்கல் விருப்பாட்சி நாயக்கன் தலைமையில் ஒரு கள்ளர் கூட்டணி…மலபாரும் கோவையும் இணைந்து மலபார் கூட்டணி என தமிழகம் கூட்டணி அமைத்து வெள்ளையனை எதிர்த்து களம் அமைக்க பூலித்தேவரே முன்னோடி.இந்த சமயத்தில் தான் மாபூஸ்கானை துணைக்கழைத்து வந்த கர்னல் ஹெரான்பூலித்தேவரிடம் தோற்று ஓடினான்.
பூலித்தேவரின் அசைக்க முடியாத பெரும் பலத்தை வீழ்த்த நினைத்த ஹெரான்அதற்கு ஒருவனை தேர்வு செய்தான்.அவன்தான் மருதநாயகம் என்று நடிகர் கமலகாசன் தூக்கிக்கொண்டாடும் கான்சாகிபு…இந்த கான்சாகிபு ஒரு சிறந்த போர்வீரன் என்பதில் ஐயமில்லை…அவன் அப்போதுதான் வெள்ளையர்களின் படைத்தளபதியாக மைசூர் சிங்கம் என அழைக்கப்பட்ட திப்புசுல்தான் தந்தை ஹைதர் அலியை வீழ்த்தியிருந்தான்…ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையே தகர்த்த கான்சாகிபு….வெள்ளையர்களின் ஏவலாளாக…நெற்கட்டான் செவ்வல் நோக்கி படை பட்டாளத்தோடு அனுப்பி வைக்கப்பட்டான்.. அவனுக்கு துணையாக நாகை-திருச்சி-தூத்துக்குடி-பாளையம்கோட்டை-மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
1759-டிசம்பர் 4 ம் தேதியிலிருந்து 26 ம் தேதி வரை போர் நடக்கிறது.அத்தனை பெரிய படையை துணைக்கழைத்து வந்த மாவீரன் கான்சாகிபு பூலித்தேவரிடத்தில் மண்ணைக்கவ்வினான்.ஆங்கிலேய கம்பெனி ஆட்டங்கண்டது.ஆனாலும் கான்சாகிபு விடவில்லை.1760 டிசம்பரில் மீண்டும் பெரும்படையுடன் பூலித்தேவரை எதிர்கொண்டான்.தோற்றான்.ஓடினான். மூன்றாவது முறையாக 1761 ல் மே 3 ம் தேதியிலிருந்து 19 வரை நடந்த போரில் மாமன்னர் பூலித்தேவர் வீழ்த்தப்பட்டார்.
மொத்தமாக பதினெட்டு முறை ஆங்கிலேயரை எதிர்கொண்டிருக்கிறார் பூலித்தேவர்.பதினெட்டு அடி நீளமுள்ள ஈட்டியை பூலித்தேவர் பயன்படுத்தியதாக ஆங்கிலேயன் வியந்து எழுதுகிறான்.வாசுதேவநல்லூர் கோட்டையே அனைத்து போர்த்திறத்துடனும் கட்டப்பட்ட ஆகச்சிறந்த கோட்டையாக வருணிக்கிறான்.இத்தனைக்கும் மேலாக ஒரு மாந்தநேயராக பூலித்தேவர் ஒரு பண்பை நமக்கு விதைத்துச்சென்றிருக்கிறார்.அது, தன்னை தோற்கடிக்க வந்த ஆற்காடு நவாப் படையிலிருந்த இசுலாமிய தளபதிகளான முகமது மியான்ச்-முகமது பார்க்கி-நபிகான் கட்டாக் ஆகிய மூவரும்தாங்கள் பூலித்தேவரோடு நெற்கட்டான் செவ்வல் மண்ணில் தங்கவேண்டுமென சொன்னபோது அவர்களை ஆரத்தழுவி அரண்மனையில் தக்க மரியாதையோடு நடத்துகிறார் பூலித்தேவர்.இதைச்செய்வதற்கும் ஒரு இளகிய மனம் வேண்டும்.அது பூலித்தேவரிடமிருந்தது.
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம் என்ற பாடலை மாமன்னர் பூலித்தேவருக்கு காணிக்கையாக்குகிறேன்.அவர் பிறந்த மண்ணில் பிறந்ததைவிட வேறு என்ன பேறு வேண்டும் எனக்கு.மாமன்னர் பூலித்தேவரின் 301 வது பிறந்த தினம் (01.09.1715) இன்று.
-ச. அன்வர் பாலசிங்கம்


