
திராவிடர் கழக தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.
பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ்பிற்பாடு “தமிழரசு” இதழிலும் செய்தியாளராகப் பணி செய்து வந்தார்.
சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே வாழ்ந்து காட்டியவர் .
2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு. பரிதி இளம் வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சி முத்து எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியரோடு இதழாளர் பெரியார் சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.
இந்நூலை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மகளுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.
அப்படிப்பட்டவருடைய எண்ணங்கள் தொடர்ந்து நீடிக்கும் வகையில் அவரோடு நெருங்கிப் பழகிய திரு. நாச்சி முத்து , திரு. அஜயன் பாலா ஆகியோர் இணைந்து பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது எனும் ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள முடிவு செய்தனர்.
அதன் படி வருடா வருடம் ஊடகம் , இதழியல், இணையம் , பண்பாடு சமூக சேவை மற்றும் கலாச்சார பணிகளில் அர்ப்பணிப்புடன் சீரிய தொண்டாற்றி வரும் யாரேனும் ஒருவருக்கு அந்த விருதை வழங்கமுடிவு செய்தனர்.
2015ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது .
2015ம் ஆண்டு முதல் விருது திரு. ஆர் பி அமுதன் ஆவணப்பட இயக்குனர் அவர்களுக்கு காட்சி ஊடக துறையில் அவரது சீரிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது
இந்த ஆண்டு( 2016 )இந்த விருதுக்கு பண்பாட்டுத் துறையில் தீவிரமாக இயங்கி வருபவரும் இயற்கை வாழ்வியல் துறைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து செம்மை எனும் அமைப்பு மூலம் இழந்து வரும் நம் மண்ணின் அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பல அரிய சாதனைகளை செய்து வருபவரும் ஆன ம. செந்தமிழன் அவர்கள் இந்த விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
ஜூன் 25 சனிக்கிழமை மாலை சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக்பேலசில் நிகழ்ந்த எளிய விழாவில் முன்னாள் காவல் துறை இயக்குனர் திலகவதி ,மற்றும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ஆகியோர் இதை அவருக்கு வழங்க அருகில்பெரியார் சாக்ரடிஸ் அவர்களின் தந்தை திராவிட மணி , அஜயன்பாலா, கவிதாபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
நற்பணி தொடரட்டும்.


