ஒன்றிய அரசின் கொள்கைகளில் ஈழத்தமிழர்களுக்கும் இடம் வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதக் குடியேறிகளாக கருதக்கூடாது. இதை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது….

1983 ஆம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி, மருத்துவ வசதிகளை தமிழ்நாடு தொடர்ந்து வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள். அதிலும் 40 விழுக்காட்டினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சமீபத்திய ஒன்றிய அரசின் கொள்கை முன்னேற்றங்கள், குறிப்பாக குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் ஆணை 2025 ஆக்கப்பூர்வமான மற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் கூடிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. அந்த ஆணைப்படி, ‘2015 ஜனவரி 9 ஆம் தேதி வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத்தமிழர்களை சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாக கருதக்கூடாது’ என்று முறையான விளக்கம் ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கத் தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை இரத்து செய்து, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு தற்போதைய நடைமுறையில் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைகளை தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும். குடியுரிமை, நீண்டகால விசா விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையை சட்டவிரோதம் என வரையறுப்பது மனிதாபிமான சூழலைப் பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக, 2015 ஜனவரி 9 வரை இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக கருதக் கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும்.

இந்த கருத்துகளை விரைவாக, மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து நல்லமுடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Response